நைஜீரியாவின் தெற்கு நகரொன்றின் பாடசாலைப் பிள்ளைகள் கடத்தப்பட்டார்கள்.

நைஜீரியாவின் தெற்கிலிருக்கு ககாரா நகரின் பாடசாலைக்குள் செவ்வாயன்று மாலை புகுந்த குண்டர்கள் குழுவொன்று ஒரு மாணவனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, மேலும் பல மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். சில ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

இராணுவ உடைகளுடன், பலத்த ஆயுதபாணிகளாக இருந்த அந்தக் குண்டர்கள் சுமார் 1,000 மாணவர்கள் படிக்கும் அந்த அரச பாடசாலையில் கடத்திச் சென்றவர்களின் எண்ணிக்கை 40 என்று தெரியவருகிறது. 26 பேர் மாணவர்கள், மேலும் பதினாலு பேரில் ஆசிரியர்கள், பாடசாலையில் வேலை செய்பவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அடக்கம்.

 க்கடத்தல் பற்றித் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பொலீசார் கடத்தியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயன்று கொண்டிருப்பதாகவும் அதிக விபரங்களொன்று இதுவரை தெரியவில்லையென்றும் நாட்டின் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் கங்காரா என்ற நகரிலிருந்து இன்னொரு பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுப் பின்பு மீட்கப்பட்டார்கள். 

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதிகளில் தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் நாட்டு மக்களையும், இராணுவத்தையும் தாக்கி வருகிறார்கள். காலிபாத் எனப்படும் இஸ்லாமியப் பிராந்தியத்தை அமைப்பது அவர்களது நோக்கம். தெற்கிலோ காடுகளுக்குள் ஒளிந்து வாழும் கடத்தல், கொலை, கொள்ளைக்காரக் குழுக்கள் அடிக்கடி நகரங்களுக்குள் புகுந்து கொடுமையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குற்றங்களில் ஈடுபடும் இக்குழுக்களின் முக்கிய நோக்கம் பணம் பறிப்பதாகவே இருக்கிறது. அவர்களிடம் அரசியல், மதக் கோட்பாடுகளிலான பின்னணி இல்லை என்று தெரிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *