தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றிய ஆளுமை பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள்

ஈழத்தில் தமிழுக்கும் சமயத்துக்கும் தலைசிறந்த தொண்டாற்றியவர் பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைந்த செய்தி தமிழுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பன்முக ஆற்றலாளனாக விளங்கிய பேராசிரியர் க.நாகேஸ்வரன் அவர்கள்,நடிகர், பாடகர்,தமிழ் ஆய்வியலாளர்,நேர்முகவர்ணனையாளர்,ஒலிபரப்பாளர்,கதாபிரசங்கி,சொற்பொழிவாளர், என்று இன்னோரன்ன துறைகளில் சமூகத்தோடு இணைந்து பணிசெய்த ஒரு ஆளுமை ஆவார்.

யாழ் பல்கலைக்கழக சிறப்பு பட்டதாரியாகி பின்னர் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் ஓய்வுநிலை பேராசிரியராகி சிறப்புற்ற பெருமையை தன்னகத்தே கொண்டவராவார்.

எப்போதும் அன்போடும் கனிவோடும் உரையாடும் பேராசிரியரின் சிரித்தமுகம் எல்லோரையும் கவர்ந்துவிடும்.

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்துறையில் துறைதேர்ந்தவர்களில் மிக அனுபவம் வாய்ந்த ஒருவராக விளங்கிய பேராசிரியரின் இழப்பை சமூகத்தில் ஈடுசெய்யமுடியாத இழப்பேயாகும்.

யாழ்ப்பாணம் நயினை நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர்களில் ஒருவராகவும் அமைந்து சமயத்துக்கான தொண்டாற்றியவர் பேராசிரியர் அவர்கள்.

தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் ஆலயத்திருவிழாக்களில் சொற்பொழிவாளர்களில் தவிர்க்கமுடியாத ஒருவராகவும் விளங்கியவர்.

சமூகத்தின் ஆளுமையை வெற்றிநடை ஊடகமும் நினைவேந்தி அஞ்சலிகளை பகிர்கிறது.