புத்தகத்தாத்தா முருகேசன்

புத்தகத் தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட முருகேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலமானார்.

மதுரையைச் சேர்ந்த முருகேசன் அவர்களை அனைவரும் புத்தகத் தாத்தா என்று அன்புடன் அழைப்பார்கள். பாடசாலை சென்று கல்வி கற்க வாய்ப்பை பெற்றிராத அமரர் முருகேசனின் உதவியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத விடயம். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்த முருகேசனால், எந்தப் புத்தகத்தில் என்ன செய்தி இருக்கிறது என தெளிவாகச் சொல்லமுடியும் என்று சொல்லப்படுகிறது. இன்று, நேற்றல்ல… 35 வருடங்களாக புத்தகங்களை சுமந்து திரிந்தவர் முருகேசன். தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வுநிலை மாணவர்களுக்கு முருகேசன்தான் ஏந்தல். ‘‘தாத்தா… இந்தத் தலைப்பில் ஆய்வு செய்கிறேன்’’ என்று சொன்னால் போதுமாம்.எங்குதான் சேகரிப்பாரோ, அது தொடர்பான மொத்த புத்தகங்களையும் கொண்டுவந்து அவர்களிடம் சேர்த்துவிடுவாராம். அவர்களின் ஆய்வுக்காலம் நிறைவேறியதும் மீண்டும் சேகரித்துக் கொள்வாராம். ஆனால் இதற்கு இன்றுவரை கட்டணம் ஏதும் வசூலித்தது இல்லையாம். மாணவர்களாக விரும்பி ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வாராம் . தமிழுக்கு தான் செய்வது மிகப்பெரிய சேவை என்பது தெரியாமலே விருப்பமுடனும் ஆர்வத்துடனும் செய்து கொண்டிருந்த இவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்‌ உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி பலருக்கு கவலைதரும் விடயமாக மாறியுள்ளது. ஆய்வுகளில் உயர்நிலை அடைந்த மாணவர்களாலும் தமிழாலும் புத்துகத்தாத்தா முருகேசன் என்றும் எம்முள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்

எழுதுவது ; தமிழ்வானம் சுரேஷ்