கத்தாரில் 2022 உதைபந்தாட்டக் கோப்பைக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை ஆரம்பம்.

உதைபந்தாட்டக் கோப்பை 2022 கத்தாரில் நடக்கவிருக்கிறது. அதற்கான நுழைவுச்சீட்டுக்களை வாங்குவதற்காக 19.01 புதன் கிழமை முதல் வேண்டியவர்கள் தங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. சுமார் 60 எவ்ரோ அளவில் நுழைவுச்சீட்டுக்களின் விலை ஆரம்பமாகும்.

சர்வதேசப் பார்வையாளர்களுக்கான நுழைவுச்சீட்டுக்களின் விலை ரஷ்யாவில் நடந்த பந்தயங்களில் விற்கப்பட்டதன் மூன்றிலொரு பங்காக இருக்கும். அதே பார்வையாளர்கள் நுழைவுச்சீட்டுகள் கத்தாரில் வாழ்பவர்களுக்கு பத்து எவ்ரோவுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும். அதன் மூலம் கத்தாரில் ஊழியர்களாக இருக்கும் கடைநிலை விசிறிகளுக்கும் அவற்றை வாங்க முடியும். விற்கப்படாத இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் கத்தார் தொழிலாளிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும்.

நவம்பர் 22 – டிசம்பர் 18 வரை நடக்கவிருக்கும் மோதல்களைக் காண சுமார் 1.2 மில்லியன் பார்வையாளர்கள் கத்தாருக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெவ்வேறு மோதல்களுக்கான நுழைவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கும் சர்வதேசப் பார்வையாளர்களுக்கு அவை எந்தெந்த விலையில் கிடைக்கும் என்பது பற்றி பெப்ரவரி 08 ம் திகதி தெரிவிக்கப்படும். நுழைவுச்சீட்டுக்களை எவரெவர் பெறுவார்கள் என்பது குலுக்கல் மூலம் தெரிந்தெடுக்கப்படும். மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்