லொறியை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை துப்பாக்கிச் சூடு நடத்தி கைதுசெய்த பொலிஸார்

கடுவெல நகரில் லொறியில் கொள்ளையிட்டு தப்பியோடிய நபரை துரத்திச் சென்று லொறியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பெரும் பிரயத்தனத்துடன் கைதுசெய்ததாக கடுவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களனி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற குளிரூட்டப்பட்ட மூடிய லொறியின் சாரதி, வர்த்தக நிலையத்திற்கு செல்வதற்கு முன்னதாக தேனீர் அருந்துவதற்காக அருகாமையில் உள்ள இரவு உணவகத்திற்கு முன்பாக நிறுத்தியபோது சந்தேகநபர் லொறியை திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சுற்றுவட்டார பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி லொறியை நிறுத்த முற்பட்ட போதும் சந்தேகநபர் தொடர்ந்து லொறியை செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் கடுவெல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தலைமையிலான நுகேகொட பொலிஸ் பிரிவின் விசேட மோட்டார் சைக்கிள் குழுவொன்று லொறியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், சந்தேகநபர் லொறியில் இருந்து தப்பிச் செல்ல முற்ப்பட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *