ரமழான் காலத்தில் உணவுப் பண்டங்கள் சுகாதார நிலைமை தொடர்பான கலந்துரையாடல்

மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நோன்பு கஞ்சி, உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல்

காரைதீவு பிரதேச மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்களில் ரமழான் காலத்தில் விசேடமாக உற்பத்தி செய்யப்படும் நோன்புக்கஞ்சி, உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ. ஜெமீல் ஹாஜியார், மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கஞ்சி தயாரிக்கும் நபர்களும் பங்கு கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ரமழான் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள், கஞ்சி விநியோகம் போன்ற விடயங்களில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைக்கு அமைவாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் அறிவுரை வழங்கப்பட்டது.

அதன்படி பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்தல், பிளாஸ்டிக் வாளிகளில் கஞ்சி வழங்குவதை முற்றாக நிறுத்துதல், தனிநபர் சுகாதாரம் பேணி கெப், ஏப்ரன் அணிதல், கஞ்சி தயாரிக்குமிடங்களை சுத்தமாக பேணுதல், சுத்தமான உணவுப்பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான நபர்கள் மூலம் கஞ்சி தயாரித்தல், உணவைக் கையாள்பவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூலமாக கஞ்சி விநியோகத்தை பரிசீலனை செய்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலின் பின் அனைத்து வகையிலும் பங்களிப்பு வழங்குவமென பங்குபற்றிய நிறுவனத் தலைவர்கள் உறுதி அளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *