இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு: வவுனியா மாணவன் சாதனை.!!

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நேற்று (11.03) இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.

பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கபிலாசால் அண்மையில் புத்தாக்க போட்டிக்காக கண்டுபிடிக்கப்பட்டு தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்களிப்பு இயந்திரத்தை பயன்படுத்தி வாக்களிப்பு செயற்பாடு இடம்பெற்றிருந்தது.

மாணவனினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் இலங்கையின் முதல் முறையாக ஒரு தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தமை இதுவே முதல் தடவையாகும்.

இலங்கை தேர்தல் முறையில் கடதாசி பாவனை இல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கோடு குறித்த மாணவரினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொறிமுறை முதன் முறையாக மாணவர் பாராளுமன்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த ஆரம்ப நிகழ்வில் வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், பாடசாலை அதிபர், அயல் பாடசாலை அதிபர்கள், கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் முன்னிலையில் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு வாக்களிப்பும் இடம்பெற்றிருந்தது. இதன்பின்னர் குறுகிய நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *