தேசபந்து தென்னக்கோனின் மனு குறித்த நீதிமன்ற அறிவிப்பு விபரம் –

வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) மறுத்துவிட்டது.
மேலும், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை சட்டத்தின்படி செயல்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதியரசர்களை கொண்ட, நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) முகமது லாஃபர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதற்கிடையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.
தேசபந்து தென்னகோன் தனது ரிட் மனுவில், மாத்தறை நீதவான் பிறப்பித்த பிடியாணையை ரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரியிருந்தார்.
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அத்துடன், வழக்கு கட்டணமாக 10 ஆயிரத்து 500 ரூபாயை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.