காதலில் வீழ்ந்தேன், கண்ணீர் சுரந்தது..!
தலைப்பு: காகிதம்
“”””””””””””””””””””””””””””””””
விழுவதும் அழுவதும் எழுவதுமாக விரைகிறது வாழ்க்கை….
முதல் முறை விழுகையில் முண்டியடித்து வந்தாள் அம்மா
அடுத்த முறை விழுகையில் அதட்டினார் அப்பா பார்த்து நட என்றே
அடுத்தடுத்து விழுகையில்
அச்சமின்றி எழுந்தேன்
கால் இடறி விழுகையில்
கையூன்றி எழுந்தேன்
காலை வாரி விடுகையில் கவனத்துடன் எழுந்தேன்
பாதையில் விழுந்தேன்
பயமின்றி தொடர்ந்தேன்
பருவத்தில் விழுந்தேன்
பக்குவம் வந்தது…
காதலில் விழுந்தேன்
கண்ணீர் சுரந்தது

பந்தங்களால் விழுந்தேன்
பட்டறிவு … தெளிந்தது…
உறவுகளால் விழுந்தேன்
உள்குத்து புரிந்தது….
விபத்து நேர விழுந்தேன்
விலா எலும்பு உடைந்தது….
போதையில் விழுந்தேன்
பொறுப்பு குலைந்தது
வாதையில் விழுந்தேன்
வாலிபம் புரிந்தது…
வயோதிகத்தில் நுழைந்தேன் வாழ்க்கை புரிந்தது….
வழித் துணையின்றி விழைந்தேன்
இடுகாடு அழைத்தது….
விழுவதும் அழுவதும் எழுவதுமாக
விரைகிறது வாழ்க்கை…
விழுவது நான்
அழுவது உறவுகள்
எழுவது என் சிதை….
இதுவே என் காகித வாழ்க்கை கதை…
முனைவர் :
தமிழ் ஆர்வலர்
கவித்தேடல்
மு.மொய்தீன்
(வடசென்னை)
11-3-2025-