திருகோணமலை பொது வைத்தியசாலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது…!!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியரை போன்று சீருடை அணிந்து நோயாளர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் பணம் போன்றவற்றை ஏமாற்றி கொள்ளையாடி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளை அடுத்து திருகோணமலை நகரிலுள்ள கடை ஒன்றிற்கு சென்று கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்வதற்காக பேசிக் கொண்டிருக்கும் போது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாவனல்லை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.