புதிய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற அவுஸ்திரேலியா உறுதியளித்தது!

இரு நாடுகளுக்குமிடையிலான 70 ஆண்டுகால பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைப் பற்றி அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் இன்று கருத்துத் தெரிவித்தார். இலங்கை புதிய நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற அவுஸ்திரேலியா உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று காலை (ஜூன் 3) ஜனாதிபதி செயலகத்தில் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸுடன் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, குறிப்பாக இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, ஜனாதிபதி இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து துணைப் பிரதமர் மார்ல்ஸுக்கு விளக்கினார். அத்துடன், ஊழல் மற்றும் மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
சமீபத்திய கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவிற்கும், சட்டவிரோத வர்த்தகம், மனிதக் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அதன் உதவிக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். சுற்றுலா மற்றும் முதலீடுகளுக்கு இலங்கை ஒரு பாதுகாப்பான இடமாக தொடர்ந்து இருக்கும் என்றும் ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை துணைப் பிரதமர் மார்ல்ஸ் பாராட்டினார். வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், சுற்றுலா மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதே தனது விஜயத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.