பதிவுகள்

கொரோனா பரவலுக்கேற்ப சுகாதார நடைமுறைகள் – அமைச்சர் நளிந்த

கொரோனா தொற்றுக்குள்ளாகும் நபர்களின் அடிப்படையிலேயே சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேவையேற்பட்டால் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் கடுமையாக்கப்படுமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதாகவும், ஆசிய நாடுகளில் இந்தத் தொற்று பரவலடைய ஆரம்பித்தது முதல் அதுதொடர்பில் சுகாதார அமைச்சும் தொற்று நோயியல் பிரிவும் தொடர்ச்சியாக அவதானத்துடன் செயற்பட்டு உலக சுகாதார ஸ்தாபத்துடனும் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றுக்கான நோய் அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பி.சி.ஆர். பரிசோதனைகளையும் அதிகரித்துள்ளோம். அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே முகக்கவசம் அணிதல் உள்ளிட் அடுத்தகட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும். பொறுப்பில்லாமல் தீர்மானம் எடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை.

சுகாதார அமைச்சரின் செயலாளர் அனில் ஜயசிங்க தலைமையிலான அதிகாரிகள் தொடர்ச்சியாக சந்தித்து கலந்தாலோசித்து தீர்மானங்களையும் எடுத்த வருகிறார். பி.சி.ஆர். பரிசோதனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. தற்போது அந்தப் பரிசோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோன்று வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. தேவையேற்பட்டால் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *