போலந்து தேர்தல் முடிவுகள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவுமா?
எழுதுவது :சுவிசிலிருந்து சண் தவராஜா
மூன்று ஆண்டுகளையும் கடந்து நீடித்துவரும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ரஸ்யாவும் உக்ரைனும் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ள நிலையில் உக்ரைனின் அயல்நாடான போலந்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. யூன் முதலாம் திகதி நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலில் எதிர்க் கட்சியான தேசிய பழைமைவாத சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்ட கரோல் நவ்ரொக்கி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த இவர் கருத்துக் கணிப்புகளையும் மீறி தனது போட்டியாளரான ஆளுங்கட்சியான சிவிக் பிளட்போர்ம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தலைநகர் வார்சோவின் நகர பிதாவான ராபல் சாஸ்கோவ்ஸ்கியை தோற்கடித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாகச் செயற்பட விரும்பும் ஆளுங்கட்சிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து அதிகம் விலகிச் செயற்பட விரும்பும் எதிர்க்கட்சி சார்பிலான வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதானது தற்போதைய நிலையில் உலக அரசியலில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போதைய ஜனாதிபதியாக உள்ள அன்ட்சேஜ் டுடா பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்துக்கு பல வழிகளிலும் முட்டுக்கட்டையாக இருந்துவரும் நிலையில் புதிய ஜனாதிபதியும் அதேபோக்கைக் கடைப்பிடிப்பார் எனவே எதிர்பார்க்கப்படும் நிலையில் போலந்தின் எதிர்கால அரசியல் போக்கு என்னவாகும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. 2027 இறுதியில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சி ஆதரவு பெற்ற ஒருவர் வெற்றி பெற்றிருப்பதானது எதிர்க்கட்சி முகாமில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போதைய நிலையில் ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் உள்ள போதிலும், ஜனாதிபதி ஏற்படுத்தக்கூடிய முட்டுக்கட்டைகளை உடைத்தெறியக் கூடிய அறுதிப் பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், தமது பலத்தை உறுதிப்படுத்தும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்று நாடாளுமன்றில் நடத்தப்படும் எனப் பிரதமர் அறிவித்து உள்ளார்.

நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் 10,000 வரையான அமெரிக்கப் படையினர் நிலைகொண்டு உள்ளனர். போரை எதிர்கொண்டுள்ள உக்ரைன் நாட்டுக்கான பிரதான வழங்கல் பாதையாகவும் போலந்தே உள்ளது. அது தவிர ஐரோப்பா நோக்கிப் படையெடுக்கும் உக்ரைன் அகதிகளின் பிரதான பாதையாகவும் போலந்தே உள்ளது. போலந்தில் மாத்திரம் ஒரு மில்லியன் வரையான உக்ரைன் அகதிகள் உள்ளதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. உக்ரைன் அகதிகளுக்கான அதிகரிக்கும் செலவினங்கள் போலந்து அரசியலில் பிரதான பேசுபொருளாகவும் உள்ளது. உக்ரைன் போரை ஆதரித்தாலும் அந்நாட்டின் தலைவர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டுள்ள கரோல் நவ்ரொக்கி பேச்சுக்கள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை உடையவராக உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என வெளிப்படையாக அறிவித்துச் செயற்படும் நவ்ரொக்கியின் தேர்தல் வெற்றி உக்ரைன் விவகாரத்தில் ட்ரம்பின் முயற்சிகளுக்குச் சாதகமான ஒன்றாகவும், இந்த விவகாரத்தில் எதிர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவும் பார்க்கப்படுகின்றது.
29,363,722 பதியப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட போலந்தில் மே 18ஆம் திகதி நடைபெற்ற முதலாவது சுற்றுத் தேர்தலில் 67.31 விழுக்காடு மக்கள் வாக்களித்திருந்தனர். இந்த வாக்களிப்பு விகிதாசாரம் 1989ஆம் ஆண்டின் பின்னான தேர்தல்களில் அதிக வாக்காளர்கள் கலந்துகொண்ட தேர்தலாக உள்ளது. 13 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் ராபல் சாஸ்கோவ்ஸ்கி 31.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார். 29.5 விழுக்காடு வாக்குகளுடன் கரோல் நவ்ரொக்கி இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது சுற்றுத் தேர்தல் யூன் முதலாம் திகதி இடம்பெற்றது. இதில் முதலாவது சுற்றை விடவும் அதிகமாக 71.63 விழுக்காடு மக்கள் வாக்களித்திருந்தனர். இரண்டாவது சுற்றில் சாஸ்கோவ்ஸ்கி இலகுவான வெற்றியைப் பெறுவார் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூட சாஸ்கோவ்ஸ்கி 50.3 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்றே தெரிவித்திருந்தன. தான் வெற்றி பெற்றதாகக் கருதி வாக்காளர்களுக்கு அவர் நன்றி கூடத் தெரிவித்திருந்தார். ஆனால் இறுதி முடிவு தலைகீழாக அமைந்திருந்தது.
இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டபோது நவ்ரொக்கி 50.89 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். ஒரு சரித்திரவியலாளர் என வர்ணிக்கப்படும் நவ்ரொக்கி உள்ளூர் மட்டத்தில் குத்துச் சண்டை வீரராகவும், கால் பந்தாட்ட வீரராகவும் அறியப்படுபவர். தேசிய நினைவு நிறுவனம் என்ற அமைப்பின் தலைவராக உள்ள நவ்ரொக்கி சோவியத் கால நினைவுச் சின்னங்களை அழித்தொழிப்பதில் முன்னணிப் பாத்திரம் வகித்துள்ளார். இதன் அடிப்படையில் ரஸ்யாவுக்கு வேண்டப்படாதோர் என்ற பட்டியலில் இவர் வைக்கப்பட்டுள்ளமை நினைவில் கொள்ளத்தக்கது.
தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னதாக அமெரிக்கா சென்றிருந்த இவர் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்துத் திரும்பியிருந்தார். இவரது வெற்றிக்கான வாழ்த்தை அன்றே ட்ரம்ப் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது சுற்றில் சாஸ்கோவ்ஸ்கி 49.11 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தார். இருவருக்கும் இடையில் 4 இலட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசமே இருந்தது.
தனது வெற்றிச் செய்தியில், ”மிகவும் வலுக் குறைந்தவர்களை நன்கு பராமரிக்கக் கூடிய, வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு பாதுகாப்பான நாட்டில் வாழவே நாம் விரும்புகிறோம். அந்த நாடு சர்வதேச அடிப்படையிலும், ஐரோப்பிய மட்டத்திலும், அத்திலாந்திக் கடல்கடந்த நாடுகளிலும் நல்லுறவு கொண்ட ஒரு நாடாக விளங்க வேண்டும். நூற்றாண்டுகள் பழமையான தனது மரபுகளையும், வரலாற்றையும் கௌரவிக்கும் ஒரு நாடாக அது விளங்க வேண்டும்” என்றார் நவ்ரோக்கி.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆகஸ்ட் 6ஆம் திகதி பதவியேற்க உள்ள அவருக்கு டொனால்ட் ட்ரம்ப், ஹங்கேரியின் அதிபர் விக்டர் ஓர்பன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவி ஊர்சுலா வொன் டெர் லெயென் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள போதிலும் தனது வாழ்த்துச் செய்தியில் அவரின் கவலை வெளிப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகின்றது. டொனால்ட் டஸ்க் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவிடம் இருந்து சற்று விலகி ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதிக நெருக்கம் காட்டிவரும் நிலையில் எதிர்க்கட்சி ஆதரவாளரான நவ்ரொக்கி வெற்றி பெற்றிருப்பதை அவர் கசப்போடு ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளார் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
தேர்தல் முடிவுகளும், தனிநபர்களின் வெற்றிகளும் மாத்திரம் பூகோள அரசியலை முடிவு செய்வதில்லை. அந்த வகையில் நவ்ரோக்கியின் வெற்றியும் உலக அரங்கில் பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்திவிடும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உக்ரைன் போர் விடயத்தில் ஸெலன்ஸ்கியை வழிக்குக் கொண்டுவர அவரை ஒரு அழுத்தக்கருவியாகப் பாவிக்க வழியிருக்கிறது. அப்படியாவது உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் அது உலகுக்கு நல்லது. அந்த வகையில் நவ்ரோக்கியின் வெற்றி போலந்துக்கு மாத்திரமன்றி, உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றே.