சண்டி ஹோமம் நடைபெறுவது எதற்காக? எப்படி?

சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பழிகள் தடைகள் ஆகியவை அகலும். செல்வம், சுகாதாரம், இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கப்படும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர்.

தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும், அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது அனுபவம் வாய்ந்த புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம். இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடாவிட்டால் பயனுள்ளவையாக இருக்காது.

இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும். இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும். 13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும்.

சண்டி ஹோமம் என்றால் என்ன?

1.மஹாகாளி சண்டிகை, 2.மஹாலக்ஷ்மி சண்டிகை, 3.சங்கரி சண்டிகை, 4.ஜெயதுர்கை சண்டிகை, 5.மஹா சரஸ்வதி சண்டிகை, 6.பத்மாவதி சண்டிகை, 7.ராஜமாதங்கி சண்டிகை, 8.பவானி சண்டிகை, 9.அர்தாம்பிகை சண்டிகை, 10.காமேஸ்வரி சண்டிகை, 11.புவனேஸ்வரி சண்டிகை, 12.அக்னி துர்கை சண்டிகை, 13.சிவாதாரிகை சண்டிகை.

இந்த 13 சக்திகளும் இணைந்த சக்தி மஹா சண்டிகா பரமேஸ்வரி. இந்த யாகங்கள் மார்கண்டேயரால் சொல்லப்பட்ட 700 மந்திரங்களினால் நடைபெறும். இந்த யாகம் செய்வதனால் உலக நன்மை ஏற்படும். சத்ரு பயம் நீங்கும். லஷ்மி தேவியின் அனுக்ரஹம் கிட்டும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம், அனைத்து காரியங்களும் வெற்றி கிட்டும். இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே அணைத்து விதமான பாபங்களும் எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சண்டி யாகத்திலே சொல்லப்படுகிறது.

ஹோமம் நடைபெறும் போது யாகத் தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு. சண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம்
  2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி
  3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம்
  4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி
  5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம்
  6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி
  7. பூசணிக்காய் – சத்ருநாசம்
  8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி
  9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி
  10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி
  11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்)
  12. நெல் பொரி – பயம் நீக்குதல்
  13. சந்தனம் – ஞானானந்தகரம்
  14. மஞ்சள் – வசீகரணம்
  15. பசும்பால் – ஆயுள் விருத்தி
  16. பசுந்தயிர் – புத்ர விருத்தி
  17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி
  18. நெய் – தனலாபம்
  19. தேங்காய் – பதவி உயர்வு
  20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி
  21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம்
  22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம்
  23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நீத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்று வரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரணமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது.

ஹோமத்தின் போது புனித நீரால் கும்பத்தை நிரப்பி, அலங்கரித்து வேண்டிய தெய்வங்களை அதில் ஆவாஹனம் செய்து (வரவழைத்து), ஹோமத்தீயில் தெய்வங்களை பூஜை செய்து ,பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து உரிய மந்திரமோதி நம் குறைகளை, தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.

அந்த வகையில் மகா சண்டி ஹோமம் நமது தேவஸ்தானத்தில் வெகு சிறப்பான முறையில் நடைபெற எல்லாம் வல்ல ஸ்ரீ நாகபூசணி அம்பிகையின் திருவருள் கைகூடி உள்ளது.

எழுதுவது: கோபி சிவம் குருக்கள்
லண்டன் Croydon ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோயில்
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *