இன்றைய குடும்பம்..!

🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡*உலக குடும்ப தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡

இன்று உலகமே !
ஒரு குடும்பமானது…..
ஆனால்
ஒவ்வொரு குடும்பமும்
ஒரு உலகமானது…..

இன்றும்
குடும்ப பல்கலைக்கழகம் இருக்கிறது….
முதியோர் என்னும்
பேராசிரியர்கள்
இல்லாமல்…..

உறவு பாலங்கள் இருக்கிறது
ஆனால்
இணைக்கும் தரைதான்
உடைந்து போய்
கிடக்கின்றது……!

கூட்டுக்குடும்பம்
உடைந்து
தனிக்குடும்பம் மட்டும் உருவாகவில்லை …..
அன்பு உடைந்து
ஏக்கமானது…….
பாசம் உடைந்து
பரிதவித்தலானது…….
ஆதரவு உடைந்து
அனாதையானது……
பொதுநலம் உடைந்து
சுயநலமானது…….
உறவுகள் உடைந்து
அந்நியமானது…..!
உடைந்ததெல்லாம் என்றுதான்
ஒன்று சேருமோ….?

மனைவி
தொலைக்காட்சியோடும்
கணவன் லேப்டாப்போடும்
பிள்ளைகள் செல்போனோடும்
குடும்பம் நடத்துகின்றனர்……

பிள்ளைப்பானைகளில்
ஓட்டை விழுந்ததைக்கூட
அறியாமல்……
பணத்தண்ணீரைத் தேடி
ஓடவே !
நேரம் சரியாக இருக்கிறது
இன்றையப்
பெற்றோர்களுக்கு…….!

இன்று
குடும்பம் என்பதற்கான
அடையாளங்களில்
நான்கு சுவர்கள் மட்டுமே
எஞ்சியுள்ளது……!

குடும்பத்தினால்
குடும்ப உறுப்பினர்களுக்கு
கிடைப்பது என்னவோ
ரேஷன் கடை
பொருட்கள் மட்டுமே….!

இன்று
குடும்பம் நடத்துபவர்களை விட
குடும்பத்தை
ஓட்டுபவர்கள் தான் அதிகம்…..!

பலருக்கு விவாகம்
செய்து வைக்கப்படுகிறது
விவாகரத்து
செய்வதற்காகவே….!

நேற்று கூட்டுக்குடும்பம்
இன்று தனிக்குடும்பம்
நாளை தனித்தனி குடும்பம்…

நரகமும்
சொர்க்கமும்
வாழ்க்கையில் இல்லை
நாம் வாழ்வதில்
இருக்கிறது……!

வாழ்க்கையில்
உயர்வான குடும்பமும்
தாழ்வான குடும்பம்
இருந்தாலும்
அதை திறக்கின்ற சாவி
அவரவர் கையில்தான்
கொடுக்கப்பட்டிருக்கிறது….

குடும்பம் தான்…..
இவ்வுலகையே
வழிநடத்தும் தலைவன்….
மனித வாழ்க்கைக்கு
அர்த்தத்தைக் கொடுக்கும்
அகராதி….

குடும்பத்தின் சிறப்பை
போற்றுவோம்….!!!
குடும்பத்தின் பெருமையை
முன்னேற்றுவோம்……!!! *அனைவருக்கும் உலக குடும்ப தின நல்வாழ்த்துகள்* *கவிதை ரசிகன் குமரேசன்*

🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *