இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

குமாரபுரம் பகுதியில் விபத்தினை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 4 பேர் காயம்

மூதூர் – கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து தெகிவத்தை நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனமானது திருகோணமலையில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அப்பகுதியில் நின்ற நபர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவரும் வீதியில் நின்ற நபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து பிக்கப் ரக வாகனத்தில் வந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து வெளி இடத்தில் இருந்து ஆயுதங்களுடன் வருகை தந்த சிங்கள இளைஞர்கள் சிலர் ஆயுதங்களைக் கொண்டு குமாரபுரம் பகுதியில் நின்றவர்கள் மீதும், வீடுகளுக்குள்ளும் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *