அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விசேட அறிவிப்பு

அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுற்றறிக்கை அனைத்து அரசு நிறுவனங்களையும் “திரி-ஆர் எண்ணக்கருவை ” கடைப்பிடிக்குமாறு அறிவித்துள்ளது.
பல அரசு நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளதுடன், அந்த நிறுவனங்களுக்கு தினமும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வருகை தருவதால் ஏற்படும் கழிவுகளைக் கட்டுப்படுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் காகிதப் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்க வேண்டும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் ஊடாக பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவது மற்றும் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை கண்காணித்தல் பற்றியும் அந்த சுற்றறிக்கையின் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் நிறுவனங்களுக்கு முறையான கழிவு முகாமைத்துவ திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.