புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா? – போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10,000 ரூபாய் பணம் தருவதாக கூறி வௌிநாட்டில் இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் வௌியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த பணியகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இயங்கும் யூடியூப் சேனல் மூலம் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகல்களை நாட்டில் உள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திற்கும் அனுப்பி பணம் பெறலாம் என்று போலியாக அறிவுறுத்தப்படுவதாகவும் பணியகம் ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும் பணியகம் இதுபோன்ற ஒரு அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை என்றும், இந்த மோசடியில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் பணியகம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் புலம்பெயர்ந்த சமூகத்தை பணியகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள், பணியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், பேஸ்புக், யூடியூப் மற்றும் டிக்டொக் மூலம் மட்டுமே பணியகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.