தரம் 1 மற்றும் தரம் 5 என்பவற்றுக்கு புதிய கல்வி சீர்திருத்தம்.!

2026 இல் தரம் 1 மற்றும் தரம் 5 ஆகியவற்றில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வவுனியாவிற்கு விஜயம் செய்த அவர் உக்கிளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று (20.04) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வடக்கில் நான் சென்ற இடமெல்லாம் மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் வழங்கினர். உண்மையில் இந்த பயணம் எனது குடும்பத்தாருடன் கூடி மகிழந்தது போல இருப்பதை உணர்கின்றேன். நாட்டின் பொருளாதரத்தை கிராம மட்டத்தில் இருந்து அபிவிருத்தி செய்ய வேண்டும். நாட்டையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். எங்கள் பிள்ளைகளின் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
கிராமங்களில் உள்ள சிறிய வீதிகள் திருத்தப்பட வேண்டியிருக்கிறது. இந்த வவுனியா மாவட்டம் பெரிய நகரமாக உள்ளது. அதன் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் உல்லாச பிரயாணிகளை இங்கு வரவழைக்க வேண்டிய முறைமையை நாம் உருவாக்குவோம். எனவே, அரசாங்கத்திற்கு பொருத்தமான எங்களுடன் இணைந்து செயற்படக்கூடிய சபைகளை மக்கள் உருவாக்க வேண்டும். அதன் மூலமே கிராமங்களுக்கும் விரைவான அபிவிருத்தியை கொண்டு வரமுடியும்.
கடந்த காலங்களில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தற்போது பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். வழமையாக தாங்கள் கைக்கொண்டது போல மீண்டும் இனவாதத்தை கைகளில் எடுத்துள்ளனர். மக்களிடையே குரோதங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். எங்களோடு மக்கள் இணைந்திருப்பது அவர்களுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் அவர்களிடம் கேட்கிறோம் பழைய அரசியல் கலாசாரத்தை கைவிட்டு மக்கள் விரும்புகின்ற அரசியல் கலாசாரத்திற்குள் நுழைந்து எங்களுடன் இணைந்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். கடந்தகால நிலைப்பாடுகள் மாறிவிட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதத்தை மீண்டும் உருவாக்க நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. அன்பையும் அரவணைப்பையும் கொண்ட ஒரு நாட்டை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது. அது இலகுவான ஒரு விடயமல்ல. காலம் காலமாக பிரிவினையை ஏற்ப்படுத்தி வந்த வடுக்களை போக்குவது கடினமான விடயமே.
ஒவ்வொருவருக்கிடையிலும் இழந்து போன நம்பிக்கையை ஏற்படுத்துவது இலகுவானதல்ல. ஆனால் நாம் நல்ல ஒரு அரசியலை செய்வதற்கான நம்பிக்கையை கொண்டுள்ளோம். உங்கள் பிரச்சினைகளை கேட்பதற்கும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கும் நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். உங்கள் அனுபவங்களை புரிந்து கொண்டு எங்களை மாற்றி பயணிக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். அதன் மூலம் நல்ல ஒற்றுமையான ஐக்கியமான நாட்டை எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டும்.
எங்களுக்கு செய்வதற்கு பல வேலைத் திட்டங்கள் இருக்கின்றன. இந்த வன்னி பிரதேசத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அரசு என்ற வகையில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றோம். வடபகுதி மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை என்பன நாடு முழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக உள்ளது.
சிறுவர்கள் பாடசாலை கல்வியில் அலட்சியமான போக்கை கடைப்பிடிக்கின்றமை வேதனையான விடயமாக உள்ளது. போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது. இதில் மிகுந்த கவனத்தை நாம் செலுத்த வேண்டும்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நாம் புதிய கல்வி சீர்திருத்தம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கின்றோம். தரம் 1 மற்றும் தரம் 5 என்பவற்றில் அந்த மாற்றங்களை கொண்டு வரவுள்ளோம். மே மாதத்தில் இருந்து அந்த மாற்றங்கள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளோம். ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்க எதிர்பார்த்துள்ளோம். கல்வியியல் கல்லூரிகளை விருத்தி செய்து அதில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளோம்.
ஆசிரியர் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியான விடயங்களை உள்ளடக்க எதிர்பார்த்துள்ளோம். இதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம்.
மக்கள் எதிர்பார்க்கின்ற சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டை கையளிப்பதற்கு நாங்கள் அனைவரும் தயாராக வேண்டும். அதற்கு ஊழலற்ற சபைகளை உருவாக்க வேண்டும். ஊழல் நிறைந்ந சபைகளுக்கு நிதிகளை ஒதுக்குவது கடினமான விடயம். இதனை நீங்கள் புரிந்து காெள்ள வேண்டும். மத்தியில் இருக்கும் அரசாங்கம் உள்ளூராட்சி சபை அதிகாரங்களையும் காெண்டிருக்கும் பாேது அபிவிருத்தியை இலகுவாக காெண்டு செல்லலாம். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு இன, மத பேதமற்ற தேசிய மக்கள் சக்தியின் கரங்களை பலப்படுத்துங்கள் என்றார்.