கட்டுரைகள்பதிவுகள்

வல்லிய வேடன் – அச்சமும் நடுக்கமும் எதற்கு ?

“நீர் நிலங்களின் அடிமையாரு உடமையாரு  

நிலங்களாயிரம் வேலியில் திரிச்சதாரு?  

திரிச்ச வேலியில் குலம் முடிச்சதெத்றபேரு?”

“ஞான் பாணன் அல்ல பறையனல்ல, புலையனல்ல.

நீ தம்புரானுமல்ல, ஆனேல் ஒரு மயிருமல்ல!”

கபட தேசவாதி, நாட்டில் மத ஜாதி வியாதி!  

வல்லிய வேடனின் வில்விடு அம்பாய்  

சொல்லிசையாக துள்ளிசையோடு  

ஒடுக்கப்பட்டோர் ஓங்கிய குரலாய்  

அவன் எழுதிய கவி வரி  

சொல்லுதே அவன் வலி!

இவன் வெஞ்சினம் கண்டு

அஞ்சி நடுங்குது!

ஆண்ட வர்க்கமும் ஆளும் அரசும்!

விளிம்புநிலை மக்களின் குரலாய் மேடைகள் தோறும் இவன் வீறு கொள்கிறான். கேரள தேசத்து மக்களுக்காகப் பேசுகிறான். பாலஸ்தீனம், சிரியா, கொங்கோ, ரஷ்யா, அமெரிக்கா சீனம், என்று உலக அரசியல் பேசுகிறான். அவன் வலியை மட்டும் பேசவில்லை, மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறான்; காதலையும் பேசுகிறான்; புத்தனைப் போல் தத்துவம் பேசுகிறான்;  தன் தாயின் தேசமான ஈழத்தையும் பேசுகிறான். இவற்றின் ஊடாக மக்களைக் கவர்ந்து ஒரு பேசுபொருளாகி நிற்கிறான். கடந்த சிலநாட்களாக சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாகி நிற்கிறான்.  

அவனது சிறுபராய முதலான அனுபவங்கள், அவன் தாயின் வலி, தந்தையின் வலி என்பனவே அவனது வார்த்தைகள், சொல்லிசை  என்பவற்றினூடாக ஒடுக்கப்பட்டோரின் குரலாக அவனை உரத்துப் பேச வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவன் பேசும் விடயம் சத்தமாகக் கேட்பதால், அவனை ரசிப்பவரின் சத்தங்கள் அதைவிட அதிகமாகக் கேட்பதால் தடுமாறிப் போன கேரள அரசு அவனை அடக்க நினைத்தது. தற்போது இந்திய ஒன்றிய அரசின் பின் நிற்கும் காவிக் கூட்டம் அவன் குரலை ஒடுக்க முனைந்து நிற்கிறது என்று சொல்கிறார்கள். அதுவே அவனுக்கான மக்களின் மேலும் ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது.  


அவன் தாயின் வேரானா ஈழத்தின் வலியையும் பாடல் மூலம் வெளிப்படுத்தியதைக் கேட்ட அவன் எம்மவரின் தத்துப் பிள்ளையாகிப் போனதில் ஆச்சரியமில்லை. அதனால் கடந்த சில நாட்களாகவே எம்மவர் பலரின்  Timeline இல் வேடனின் வேட்டைதான். ஒரு இசைக் கலைஞனை, அவனது படைப்பைக் கொண்டாடுவது தவறில்லை. அதுவும் சமூக அக்கறையுள்ள ஒரு விடயம் எனில் எதை மற்றவருக்கும் போய்ச் சேரும் வகையில் பகிர்வது நல்லதே.

ஆனால் அவனின் தாய் ஈழத்தவர் என்பதால் அவன் எமது பிள்ளை, கேரளத்தின் தத்துப் பிள்ளை என்பதெல்லாம் அர்த்தமற்றது. தன்னை கேரளத் தந்தைக்கும் ஈழத் தமிழ்த் தாய்க்கும் பிறந்த பிள்ளை என்று அவனே அடையாளப்படுத்தியுள்ளான். அதனை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  

அவன் தனக்கென்று ஒரு அடையாளத்தை வெளிப்படுத்திய பின்னரும் எம்மில் சிலர் அவன் ஈழத் தமிழன் என்று ஆளாளுக்குப் புளுகுவதும், அவனை வேறு சொல்லிசைக் கலைஞரோடு ஒப்பீடு செய்வதுமாக வழமை போல குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவதையும் பார்க்க முடிகிறது. அதேபோல சில தமிழக நெட்டிசன்களும், Youtubers உம் சில “So called” சமூக, அரசியல் விமர்சகர்களும் தமது அறிவுக்கு எட்டிய வகையில் வகை தொகையின்றி ஏதேதோ பேசி வருகின்றனர்.

தமிழகத்தாரும் சரி, ஈழத் தமிழரும் சரி, அவனை எம்மவன் என்று உரிமை கொண்டாடுவதை தவிர்த்து, அவன் யார் என்று அடிமுடி தேடுவதை விடுத்து, அவனிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம். குறிப்பாக அவனின் பாடல்கள் மூலம் என்ன சொல்கிறான்; அது என்ன செய்தியை சமூகத்தில் கடத்துகிறது; அவன் கூறும் விடயங்களோடு ஒப்பிடும்போது நாம் எங்கு நிற்கிறோம் என்பதையும் சுயமதிப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள், காலம் காலமாக அடக்குமுறைக்கு ஆளான சமூகங்கள்  

என்பவற்றின் வலிகளை எந்தவித சமரசமும் இல்லாமல் தேவைப்படும் இடங்களில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் வேடனால் அவன் சொல்ல வந்ததை மக்களுக்கு எளிதாகக் கடத்த முடிகிறது. அவன் மலையாள மொழியில் இதனைச் செய்வதால் ஈழத் தமிழரின் பிரச்சனையை கேரளத்து மக்களில் பலரும் அறியும் ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.  


இந்த விடயத்தை அவதானித்தபோது எனது மனதில் ஒரு கேள்வி எழுந்தது.  எமது போராட்டம் பற்றி மலையாள மொழியில் பேச ஒருவன் கிடைத்துள்ளான். இதேபோல எமது நியாத்தை, வலியை பிரெஞ்சு மொழியிலும் ஜெர்மன் மொழியிலும் ஆங்கில மொழியிலும் அந்தந்த நாட்டில் உள்ள மக்களுக்கு சொல்லும் வகையில் புலம்பெயர் சமூகத்தில், எமது அடுத்த தலைமுறையில் சொல்லிசைக் கலைஞராக தமிழர்கள் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தால், அப்படி ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. இனியாவது முயற்சி செய்தால் உலகில் பலமிக்க நாடுகளில் உள்ள மக்களுக்கு, தமிழருக்கு எதிராக நடைபெற்ற அடக்குமுறைகள், எமது வலி என்பவற்றை புரிய வைக்க முடியும்.  

மாறாக, தற்போது செய்வது போல ஈழத்து, தமிழகத்து சொல்லிசைக் கலைஞர்களை வரவழைத்துப் பாட வைப்பதால் குறித்த கலைஞர்களைப் பிரபலப்படுத்த உதவலாம். அதைவிடப் பெரிதாக எமது சமூகத்திற்கு எந்த நன்மையையும் தரப்போவதில்லை.  

தற்போது ஈழத் தமிழர்களும் தமிழகத்தாரும் செய்வது போல நவீன பெரியார், பாரதி போல புரட்சிக்காரன், ஈழத் தமிழச்சிக்குத் தப்பாமல் பிறந்த புலிக்குட்டி என்று ஆளாளுக்கு வேடன் மேல் பெரியாரின் ஆவியையும் பாரதியாரின் ஆவியையும் புலிகளின் ஆவியையும் ஏவி விடாமல் சரியான பக்கத்தில் உங்கள் பார்வையைச் செலுத்துங்கள். அவனை அவன் விரும்பியதைச் செய்ய விடுங்கள். உங்களுக்காக அவன் செய்வான் என்று இலவு காக்கும் வேலையை விட்டு நீங்கள் செய்ய வேண்டியதை செய்ய முயற்சியுங்கள்.

  • – எழுதுவது ; வீமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *