வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.

இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீரவின் தலைமையில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை பணியகம் இழந்துள்ளமை புலப்பட்டுள்ளது.

22410 ரூபாய் கட்டணம் அறவிட்டு 28 நாட்கள் வதிவிடப் பயிற்சி வழங்கியிருக்க வேண்டி இருந்தாலும், இந்தப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது புலப்பட்டது.

அந்தப் பயிற்சிக்குப் பதிலாக மூன்று மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 390 பேருக்கு நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது.

இந்த நேர்முகப்பரீட்சையும் வீடியோ ஒன்றைப் பார்ப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை புலப்பட்டதுடன், இதனால் 2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *