கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழும் விமர்சனம்
தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் தொடர்பில் கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையாக்கப்படுகிறது
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்குக் காரணம், ஒரு இலங்கைத் தமிழருக்காக, அவர் கடந்த காலங்களில் கனடா எல்லைப் பாதுகாப்பு ஆணையத்துக்கு (CBSA) எழுதிய ஆதரவு கடிதங்கள் ஆகும்.
கனடாவில் தீவிரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் முன்னாள் உறுப்பினராக கூறப்படும் செந்தூரன் செல்வகுமரன் என்பவரின் நிரந்தர குடியிருப்பு விண்ணப்பத்தை CBSA நிராகரித்து வந்ததன் காரணமாக,
2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், அமைச்சர் ஆனந்தசங்கரி – அப்போது அவர் அமைச்சராக நியமிக்கப்படாத நிலையிலேயே – CBSAவுக்கு கடிதம் எழுதி, செல்வகுமரனின் விண்ணப்பத்தை மீளாய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார் என்று குறிப்பிடப்படுகிறது.
2023ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில், கனடிய மனைவி மற்றும் மகளுடன் செல்வகுமரனைச் சேர விட CBSA மறுத்தது “கொடூரமானதும், மனிதாபிமானத்தின்மையையும்” காட்டுவதாக அவர் விமர்சித்திருந்தார். அத்துடன் இந்தக் கடிதம், அவர் Crown-Indigenous தொடர்பு அமைச்சர் ஆக நியமிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அனுப்பப்பட்டது.

பின்னர் 2025 மே மாதத்தில், அவர் பொது பாதுகாப்பு அமைச்சராக உயர்ந்தார்.
இந்த விவகாரம் தற்போது கனடா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தேசிய புலனாய்வுப் பகுப்பாய்வாளர் பில் குர்ஸ்கி, இந்த தலையீட்டை “கடுமையான தவறு” எனக் கூறி, அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Secure Canada எனும் தேசிய பாதுகாப்பு அமைப்பும், “தேசிய பாதுகாப்பு அல்லது தீவிரவாதம் சம்பந்தமான வழக்குகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிடக்கூடாது” என கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி, “அமைச்சர் ஆனந்தசங்கரி இந்த விவகாரத்தில் முழுமையாக வெளிப்படையாக இருந்துள்ளார்” எனவும், “அவர் மீது எனது முழு நம்பிக்கையும் உள்ளது” எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.