பேஷாவர் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல், சுமார் 60 பேர் இறப்பு.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் பேஷாவர் நகரின் பள்ளிவாசலொன்றில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின்போது ஒருவன் தற்கொலைக்குண்டாக வெடித்துச் சுமார் 60 பேரைக் கொன்றிருக்கிறான். மேலும் 200 பேர் காயப்பட்டிருப்பதாக நகரின் மருத்துவமனையின் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகேயிருக்கும் இந்த நகரில் ஏற்கனவே இது போன்ற தாக்குதல்கள் பாகிஸ்தான் தலிபான் என்றழைக்கப்படும் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய காலிபாத் தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் இதேபோன்ற தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். பேஷாவர் நகரப் பள்ளிவாசலில் நடந்த தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்தக் குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.

கைபர் பக்குந்த்வா பொலீஸ் அதிகாரிகளின் விபரங்களின்படி இரண்டு பேர் கிஸ்ஸா கவானி பஸார் பகுதியிலிருக்கும் ஷீயா முஸ்லீம்களின் பள்ளிவாசலில் குறிப்பிட்ட தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மட்டுமே தன்னில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளுடன் சேர்ந்து வெடித்திருக்கிறான். 

சாள்ஸ் ஜெ. போமன்