காதலியை கொன்று பொலிஸில் சரணடைந்த காதலன்

காதல் உறவை முடித்துக்கொள்வோம் என தெரிவித்த காதலியை குத்திக் கொன்றுவிட்டேன் எனக்கூறி இளைஞன் ஒருவன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் வென்னப்புவவில் பதிவுகியுள்ளது.
தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞன், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்று (18) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவருடன் சுமார் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் இருந்த நிலையில் அண்மையில் , இந்த உறவை முறித்துக் கொள்ளலாம் என தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.