கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார் – சாணக்கியன்

கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் பி. ஆர். காரணமாக அமைவார். முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அச்சமடைந்து சபை முதல்வர் மிகவும் கீழ்த்தரமான முறையில் எம்மீது சேறு பூசுகிறார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த வார அமர்வின் போது சபை முதல்வர் எம்மை தொடர்புப்படுத்தி குறிப்பிட்ட விடயம் முறையற்றது. அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன். நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அச்சமடைந்து மிகவும் கீழ்த்தரமான முறையில் சேறுபூசினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்பட்டது. இதனை அனைவரும் அறிவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநாத், ஸ்ரீநேசன் ஆகியோருக்கு நிதி கிடைக்கப்பெற்றதாக சபை முதல்வர் குறிப்பிடுகிறார்.இவர்கள் கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை.
ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து நான் அரசியல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆம் அது எனது தவறான அரசியல் தீர்மானம் என்பதை நான் எனது மக்களுக்கு குறிப்பிட்டுள்ளேன்.
எனது மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள். கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் பி. ஆர். காரணமாக அமைவார் என்றார்.