திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை
திருச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைக்கு அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகிற மார்ச் மாதம் முதல் புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மிக எளிதாக, குறைந்த கட்டணத்தில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இலங்கைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அந்த விமானம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும். மீண்டும் இந்த விமானம் மதியம் 2.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் என்று விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது