வானளாவிய முக்கோணக் கோபுரம் பாரிஸில் கட்டுமானப்பணி ஆரம்பம்

ஈபிள் கோபுரம், மொம்பனார்ஸ் கோபுரம்ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவதுவானளாவிய கட்டடத்துக்கான நிர்மாணவேலைகள் தொடங்கியுள்ளன.

180 மீற்றர்கள் உயரமும் 42 அடுக்குகளையும் கொண்ட முக்கோண வடிவிலான இந்தப் புதிய கட்டடம் பாரிஸ் நகரின் 15 ஆவது நிர்வாகப் பிரிவில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கிற்கு அருகே (Porte de Versailles exhibition center) அமையவுள்ளது. இரும்பு, கண்ணாடி கொண்டுநிறுவப்படவுள்ள இந்தக் கட்டடத்தில் கலாசார நிலையம், நான்கு நட்சத்திரஹொட்டேல், மற்றும் பொழுது போக்குமையங்கள், அலுவலகங்கள் என்பனஉள்ளடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

1889 இல் நிறைவு பெற்ற ஈபிள் கோபுரம் 1973 இல் திறக்கப்பட்ட மொம்பனார்ஸ் கட்டடம் ஆகியவற்றுக்குப் பிறகு நகரில் நிறுவப்படுகின்ற மூன்றாவது உயர்ந்தகட்டடம் இதுவாகும். பிரபல சுவிஸ் கட்டடக் கலைஞர்களான Herzog – Meuron நிறுவனம் பிரமிட் வடிவத்திலான பாரிஸ் கோபுரத்தை வடிவமைத்துள்ளது.

பொதுவாகப் பாரிஸ் நகரில் அடுக்கு மாடிகளை ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் நிறுவ முடியாது. ஆனால் விதி விலக்காக நகரின்அதி உயரக் கட்டடமாக அமையவுள்ளது இந்த முக்கோணக் கோபுரம் (Tour Triangle).

2008 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட அதன்உருவாக்கம் உள்ளூர் மக்கள், சூழல் ஆர்வலர்கள் ஆகியோரது கடும் எதிர்ப்பின்காரணமாக சட்டச் சவால்களைச் சந்திக்கநேர்ந்தது. 2014 இல் பாரிஸ் நகர சபை அதற்கு ஒப்புதல் அளித்த பிறகும் நீதிமன்றத் தலையீடுகளால் அதனை முன்னெடுக்க முடியாமற் போனது. நீண்ட கால இழுபறிகளுக்குப் பிறகு இப்போது தான் அதன் நிர்மாணப்பணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. சுமார் 660 மில்லியன் ஈரோக்கள் செலவிலான கட்டுமானப் பணிகள் 2026 இல் நிறைவடையும்.

குடியிருப்பு அடர்த்தி மிகுந்த நகரப்பகுதியில் நீண்ட காலம் நீடிக்கவுள்ளகட்டட வேலைகளால் காபன் வெளியேற்றம் அதிகரித்துச் சுற்றுச் சூழலுக்குப்பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சூழல்பாதுகாப்பு இயக்கங்கள் தொடர்ந்தும் இத்திட்டத்தை எதிர்த்துவருகின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.