ஒருதலைச் சார்பை உடைத்தெறிவோம் – சர்வதேச பெண்கள் தினம் இன்று

இந்த ஆண்டுக்கான பெண்கள் தினத்துக்கான கோட்பாடாக “நிலையான நாளைய நாளுக்காக இன்றே பாலின சமத்துவம் ஏற்போம்” (Gender equality today for a sustainable tomorrow) என்று குறிப்பிடப்படுகிறது.

உண்மையில் 1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வந்திருக்கிறது என்பதும் உண்மைதான்.

எப்படித் தொடங்கியது?
வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.
இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அந்த வகையில் இது 111-வது பெண்கள் தினம்.

எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8-ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது ஐ.நா. இதன்படி ஐ.நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் “சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி” என்பதாகும்.
உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் சரிபாதி பேர்தான் உலக தொழிலாளர் தொகையில் இடம் பெற்றுள்ளார்கள் என்கின்றன ஐ.நா. புள்ளி விவரங்கள்.

சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது. ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில்தான் இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன.
வடிவம் பெற்றது எப்போது?
கிளாரா ஜெட்கின் ஒரு சர்வதேசப் பெண்கள் தினம் வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தபோது எந்த நாளில் அதைக் கொண்டாடவேண்டும் என்று குறிப்பிட்டு எந்த தேதியையும் கூறவில்லை.

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், “அமைதியும் ரொட்டியும்”தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23) பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நான்கு நாள்கள் நடந்த இந்தப் போராட்டம், சர்வதேச மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நான்கு நாள்கள் நீடித்த இந்தப் போராட்டம் கடைசியில் ரஷ்ய முடி மன்னரான ஜார் அரியணையை விட்டிறங்குவதற்கான அழுத்தத்தை தந்தது. முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது.
இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் தினம் உண்டா?
பெண்கள் தினம் போல ஆண்களுக்கும் தினம் உண்டா?
ஆம். உண்டு. நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், 1990களில் இருந்துதான் இந்த வழக்கம் தொடங்கியது. ஆனால் இதனை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை. பிரிட்டன் உள்பட 60 நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆண்கள், சிறுவர்கள் உடல் நலம், பாலின சமத்துவம் ஆகிய நோக்கங்களுக்காகவும், நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை முன்னிறுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 8, 2022 (IWD 2022)க்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள், “நிலையான நாளைய நாளுக்காக இன்று பாலின சமத்துவம்”, பருவநிலை மாற்றம் தழுவல், தணிப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. மற்றும் பதில், அனைவருக்கும் மிகவும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க.
காலநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவற்றின் பின்னணியில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய உலகளாவிய சவால்களில் ஒன்றாகும். காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் நமது சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் கடுமையான மற்றும் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்டவர்களில் இருப்பவர்கள் ஆழமான தாக்கங்களை அனுபவிக்கிறார்கள். பருவநிலை மாற்றத்தால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர், ஏனெனில் அவர்கள் உலகின் பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் காலநிலை மாற்றம் மிகவும் அச்சுறுத்தும் இயற்கை வளங்களை அதிகம் சார்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருட பெண்கள் நாளில் உலக யாதார்த்தங்களை உணர்ந்து பெண்கள் சார்ந்து அவர்களின் தனி உரிமைகளை மதித்து நிலையான நாளைய நாளுக்காக சமத்துவமாக வாழ்வோம்.

“நிலையான நாளைய நாளுக்காக இன்று பாலின சமத்துவம் ஏற்போம்” – சர்வதேச பெண்கள் தினம் 2022

Gender equality today for a sustainable tomorrow

எழுதுவது – டொமினிக் ராஜ், தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *