கவியான என் தடங்கள்

சின்னச் சின்னச் சொல்லெடுத்து
சிங்காரமாய் வடிவமைத்து
வண்ண வண்ண வரிகளுடன்
வகையாகவே பாப்புனைந்தேன்

பொன்னைப் போன்ற உருவகத்தில்
பூப்போன்ற பெண்ணிவளும்
தன்னுள் கொண்ட உணர்வுகளை
தமிழாலே தொடுத்துவைத்தேன்

கண்ணில் மின்னும் காதலையும்
கருத்திலுள்ள எண்ணங்களும்
கண்ட காட்சியின் கோலங்களும்
கவியாக்கியே கதையுரைத்தேன்

மண்ணில் வாழும் கவிமக்களை
மலைநாட்டின் மங்கையிவள்
மாண்புடை உலகக் கவிநாளினில்
மரபுடனே வாழ்த்துரைத்தேன்

எழுதுவது :
அகிலா பொன்னுசாமி,
சபா, மலேசியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *