தேசபந்துவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி அறிவிப்பு
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

குறித்த மனுக்கள் இன்று (24) பிரீதி, பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டீ.நவாஸ் ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதி தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவை விரைவாக விசாரணை மேற்கொள்வதற்காக திகதியை வழங்குமாறும் நீதிமன்றத்தை கோரினார்.
முன்வைக்கப்பட்ட விடயதானங்களை கருத்தில் கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தொடர்புடைய மனுக்களை மே 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
தேசந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கான அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகள் சட்டத்திற்கு முரணானவை என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.