காலம் உணர்த்தும் இவைகளை..!

உலக தாய்மொழி தினம் இன்று

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

உலக தாய்மொழி தின
சிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

தமிழர்களின்
‘தாய்மொழி’ தான்
தமிழ் என்று
பலரும் நினைத்துள்ளனர்….
பல மொழிகளுக்கும்
தாய்மொழி
‘தமிழ்தான்’ என்று
வரும் காலம் உணர்த்தும்….. !

‘யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல்
இனிமை கண்டதில்லை’ என்று
பாடினான்
மாகவி பாரதியார்….
ஏனெனில்?
அவன்
‘காற்றை’ சுவாசித்து
வாழவில்லை
‘தமிழ் கவிதையை’ச் சுவாசித்து
வாழ்ந்தவன்…..!

‘தமிழுக்கு
அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்
தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்’என்று
பாடினான்
பாவேந்தர் பாரதிதாசன்
ஏனெனில்?
அவன்
“உணவால்” வாழவில்லை
“தமிழ் உணர்வால்”
வாழ்ந்தவன்…..

அந்தப்
பரம்பரையில் வந்த
நாம்தான்
தமிழ்ப்பள்ளியில்
படிப்பதும்
தமிழ் பேசுவதும்
கேவலம் என்று நினைத்து
அன்நிய மொழிக்கு
விசிறிக் கொண்டிருக்கிறோம்…

தமிழ் பேசிய பிறகு
தேனைச் சாப்பிட்டாலும்
கசக்குமடா….
தமிழை வாசித்தப் பிறகு
வீணையை வாசித்தாலும்
வெறுக்குமடா……
காலத்திற்கு
அடுத்தபடியாக
இந்த உலக்தத்தில்
“மரணம் ” இல்லாதது
எதுவென்று கேட்டால்
தயங்காமல்
தமிழ் என்று சொல்லுங்கடா..

சிங்கப்பூர்
மலேசியா
ஆஸ்திரேலியா போன்ற
அன்நிய நாடுகள்
தமிழை
“கொடிக்கட்டிப்
பறக்க விட்டுப்” பார்த்துப்
பரவசமடைகிறது….
ஆனால்
நாம்தான்
தமிழ் கொடியை
“அரைக் கம்பத்தில் கட்டி
அஞ்சலி செலுத்தவே”
ஆசைப்படுகிறோம்…..!

“கற்காலத்தில்”
தோன்றிய தமிழ் மொழி
“கணினிக் காலத்திலும்
இணையத்தைக்
கலக்கிக் கொண்டிருக்கிறது….
அதன் வலிமையைத்

தமிழனே!
உன்னால்
உணர முடியவில்லையா?

தமிழ்வழியில் கற்று
தரணியில்
புகழ் பெற்றவர்களின்
பெயர்களை
வரிசையாக எழுதினால்….
வரலாற்றில்
பக்கங்கள் பற்றாது…..

நாம்தான்
தமிழ் வழியில் படித்தால்
“வேலைக் கிடைக்காது” என்று ஆங்கிலப் பள்ளியில்
பொருட்களை
அடைமானம் வைத்து
பிள்ளைகளைப்
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்….!

அன்நியர்
நம்மிடம்
தமிழில்
பேச வேண்டும் என்று
நினைக்கும் நாம்….
நம் பிள்ளைகள்
ஆங்கிலத்தில்
பேசவேண்டும் என்று
நினைப்பது
எந்த வகையில் நியாயம்?

அன்நியர்
திக்கி திக்கி
பேசும் தமிழை
ரசித்துப் பாராட்டுகின்றோம்…
நம் பிள்ளைகள்
அழகாகப் பேசும் தமிழை
அலட்சியம் செய்கிறோம்
இது நமக்கே
இழிவு இல்லையா …?

ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
என்பது போல்….

தமிழ் மொழியின்
வலிமை திறமை
பெருமை அருமை
மென்மை இனிமை
உண்மை புதுமை இவற்றிற்கெல்லாம்….. கன்னியாகுமரியின்
கடல் பாறையின் மீது
“குன்றின் மேலிட்ட
விளக்காய் நிற்கும்
திருவள்ளுவர்
சிலையே சாட்சி….!!! “

இனியாவது
விழித்தெழு தோழா !
சிங்கம் போல்
சிலிர்த்தெழு தமிழா!

அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்துகள் *கவிதை ரசிகன்*

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *