காதல்

அகத்தின் இயல்பே அழகிய காதல்
அன்பில் இணையும்
அணைப்பில் வாழும்
சகத்தில் மாந்தர்
சாதி மறுத்தும்
சமயம் வெறுத்தும்
சேர்ந்தே… நிற்கும்

சங்கம் தொட்டே
சான்றும் காட்டும்
சுவடியில் கூட
காதல் சொட்டும்
சங்கத் தமிழர் செதுக்கிய மாண்பு
சாகும் வரையில்
சீராய் நிலைக்கும்

மங்கையர் குறிப்பில்
மயங்கிடும் காளையும்
மன்னில் காதலை
மதித்து மணந்தார்
மஙகல வேதமும்
மறவரும் வாழ்த்திட
மகிழ்ந்து உறவில்
மக்களை ஈன்றார்

வள்ளுவர் தந்த வாழ்வியல் பாடம்
வண்ணக் காதலை
வடித்தது காமம்
களவியல் என்றும்
கற்பியல் பேணும்
காதலே என்றும்
காலத்தின் கோலம்

விருப்பம் வேண்டி விழையும் மனதில்
வேட்கை மிகுந்து
வருவது காதல்
உருகும் இருவர்
ஊடல் கொண்டு
உளத்தில் வேகும்
உணர்வே காதல்

இன்றும் என்றும்
இணைந்து வாழும்
இருவர் மகிழும்
ஈற்றே.. காதல்
மீண்டும் மீண்டும்
முகிழ்ந்து மகிழும்
மெய்யுணர் சூடும்
உணர்வே காதல்

காதலே வாழ்வில் கனிந்த காலம்
கூடிட ஊடலும்
கூட்டிடும் இன்பம்
காதலை நினைத்து
கொண்டா டும்நாள்
காதலர் அன்பால்
குதூகளிப் போமே !!

எழுதுவது:
உத்திராபதி இராமன் DSP, தமிழியல் துறை,மலேசியா.