பின்லாந்துக்கான எரிவாயு செல்லும் குளாய்கள் சனியன்று காலை ரஷ்யாவால் மூடப்பட்டன.
ரஷ்யாவால் எச்சரிக்கப்பட்டு, எதிர்பார்த்தது போலவே பின்லாந்துக்கு வரும் எரிவாயுக்கான குளாய்களை இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ரஷ்யா மூடிவிட்டது. கோடை காலத்துக்கான எரிவாயு கைவசம் இருப்பதாகக் குறிப்பிடுகிறது பின்லாந்தின் எரிசக்தி நிறுவனம். அடுத்த குளிர்காலம் வரும்போது நிலைமையைச் சமாளிப்பது சவாலாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் தம்மிடம் வாங்கிக்கொள்ளும் எரிபொருட்களுக்கு “நட்பிலில்லாத நாடுகள்,” ரூபிள் நாணயத்தில் விலை கொடுக்கவேண்டும் என்று ரஷ்யா கோரியிருந்தது. அதை மேற்கு நாடுகள் பெருமளவில் உதாசீனம் செய்திருந்தன. எனவே, பின்லாந்துக்கான எரிவாயு நிறுத்தம் பற்றி வெள்ளியன்று மாலையே எச்சரிப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.
எரிவாயுவை எரிபொருளாகப் பின்லாந்து அதிகம் பாவிப்பதில்லை. நாட்டின் 6 % எரிபொருள் மட்டுமே எரிவாயுவாக இருக்கிறது. ஆனால், அதன் மிகப் பெரும்பங்கை ரஷ்யாவே கொடுத்துவந்தது. கடந்த வருடம் அது மொத்த எரிவாயுக் கொள்வனவின் 92 % ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்