பச்சைக்குழந்தைகளை வேலைக்கமர்த்தியிருக்கும் ஜப்பானிய நிறுவனம்.
நாலு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கமர்த்தப் போவதாக Kitakyushu நகரிலிருக்கும் ஜப்பானிய நிறுவனமொன்று அறிவித்திருக்கிறது. அந்தக் குழந்தைகள் செய்யப்போகும் முக்கியமான வேலை அங்கே வாழும் முதியவர்களுக்குத் துணையாக இருந்து அவர்களின் சூழலை மகிழ்ச்சியாக்குவதாகும். குழந்தைகளுக்கு ஊதியமாக அவர்களுக்குத் தேவையான மாற்றுக்கவசங்களும், பால்மா உணவு போன்றவையும் வழங்கப்படும்.
குறிப்பிட்ட முதியோர் இல்லத்தில் சுமார் 100 பேர் வாழ்கிறார்கள். பெரும்பாலும் அவர்களின் வயது 80 வயதுக்கு அதிகமானது. மழலைகளைக் காணும்போது அவர்கள் மிகவும் குதூகலமடைகிறார்கள் என்பதைக் கருந்தில் கொண்டே அந்த முதியோர் இல்லம் “குழந்தைகள் வேலைக்குத் தேவை” என்று விளம்பரம் செய்திருக்கிறது. இதுவரை 30 குழந்தைகள் அவ்வேலைக்கு வந்திருக்கிறார்கள் என்கிறது நிர்வாகம்.
குழந்தை தனது பாதுகாவலருடனேயே அங்கே வேலைக்குச் செல்லவேண்டும். நாளின் எந்தச் சமயத்திலும் குழந்தை அங்கே வந்து வேண்டிய நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளலாம், திரும்பிப் போகலாம் என்பதே வேலைக்கான கட்டுப்பாடுகள்.
குழந்தைகளின் வருதல் அங்கே வாழும் முதியவர்களை மிகவும் மகிழ்ச்சியாக்கியிருக்கிறது. சில குழந்தைகளுடன் முதியோர் நெருக்கமாகப் பழக ஆரம்பித்து அவர்களின் பெயரன், பேத்தியாகிவிட்டார்கள் என்று முதியோர் இல்ல நிர்வாகம் குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்