வட கொரியா தன்னை ஒரு அணு ஆயுதம் கொண்ட நாடு என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தமது நாடு அணு ஆயுதத்தைத் தயாராகக் கொண்ட ஒரு நாடு என்று வட கொரிய அதிபர் கிம் யொங் உன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தாம் அணு ஆயுதத்தை வைத்திருப்பது என்று எடுத்துக்கொண்ட முடிவு நிரந்தரமானது என்றும் அது எந்தக் காரணத்துக்காகவும் பேரம் பேசலுக்கு உட்படாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அணு ஆயுதம் கைவசமில்லாத நாடொன்று தம்மைத் தாக்கும் பட்சத்தில் தம்மிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பாவிப்பதில்லை என்று முன்னர் வட கொரியா கொண்டிருந்த கோட்பாடு மாற்றப்பட்டுவிட்டது. இன்னொரு நாடு அந்த ஆயுதத்தைப் பாவிக்காத பட்சத்திலும் தனது பாதுகாப்புக்காக அணு ஆயுதத்தைப் பாவிக்கத் தயார் என்ற புதிய கோட்பாடு சட்டமாக்கப்பட்டிருப்பதாக யொங் உன் தெரிவித்தார்.

“நாங்கள் அணு ஆயுதத்தைத் தயாரித்ததன் மூலம் எங்கள் நாட்டுக்கு மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். அது எங்கள் தேசிய உணர்வைப் பிரகடனம் செய்வதாகும். மற்றவர்களை அடிமைப்படுத்தும் மனப்பான்மை உலகில் இருக்கும்வரை, அணு ஆயுதங்கள் உலகில் இருக்கும்வரை, வட கொரியாவை மிரட்டும் எண்ணம் அமெரிக்காவுக்கும் அவர்களைப் பின் தொடரும் நாடுகளுக்கும் இருக்கும்வரை அணு ஆயுதங்களை எங்களது இறையாண்மையைப் பாதுகாக்கும் எண்ணம் மாறாது,” என்று அவர் தனது நாட்டுப் பாராளுமன்றத்தில் அறைகூவினார்.

வட கொரியப் பாராளுமன்றத்தில் கிம் யொங் உன் கொண்டுவந்த தீர்மானம் எதிர்ப்புக்களெதுவுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *