இப்படி ஒருவரா ?

எனக்காய் வந்த தேவதை


கண்ணின் மணியாய்த் திகழ்பவள்
கவிக்குள் கருவாய் இருப்பவள்..!
வண்ணம் கொஞ்சும் மலரிவள்
வஞ்ச மில்லாத அழகிவள்..!
பெண்ணாய்ப் பிறந்த திருமகள்
பெருமை சேர்ப்பாள் என்மகள்..!
மண்ணில் இவள்போல் இல்லையே
மயக்க வைக்கும் தேவதை..!

தவத்தால் கிடைத்த மகளிவள்
தங்கச் சிலையாய் ஒளிர்பவள்..!
கவலை தீர்க்கப் பிறந்தவள்
கடவுள் தந்த வரமவள்..!
உவகை பொங்கச் செய்பவள்
உள்ளம் கவர்ந்த சேயவள்..!
அவளே எந்தன் வாழ்வினில்
அன்பால் ஈர்க்கும் தேவதை..!

கன்னல் பேச்சால் கவர்பவள்
கனிவாய் மலர்ந்து சிரிப்பவள்..!
பன்னீர்ப் பூவாய் மணப்பவள்
பதுமை போன்ற வடிவினள்..!
தென்றல் காற்றாய் தவழ்பவள்
திங்கள் ஒளியாய்க் குளிப்பவள்..!
என்றும் உள்ளம் மகிழ்ந்திட
எனக்காய் வந்த தேவதை..!

ஹேமா ஹைதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *