செம்மணி மனித புதைகுழி: அகழ்வுப் பணிகளில் இதுவரை 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துபாத்தி பகுதியில் முன்னதாக கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன.
இதுவரை நடைபெற்ற அகழ்வுப் பணிகளில், முழுமையான 33 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சில சந்தர்ப்பங்களில் மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், காணப்படும் எச்சங்களின் அடிப்படையில் துல்லியமான எண்ணிக்கையை நிர்ணயிப்பது சிக்கலாக உள்ளதாக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் குறிப்பிட்டார்.
அகழ்வுத் தளத்தில், மனித எச்சங்களுக்கு அடுத்ததாக, குழந்தைகளுக்கான பாதணி, பொம்மை மற்றும் புத்தகப்பை போன்றவை மீட்கப்பட்டுள்ளன.


இதற்கிடையில், செம்மணி மற்றும் சித்துபாத்தி பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழிகள் ஒரே வழக்கின் கீழ் இணைக்கப்படலாம் என்ற நோக்கில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும், பாதிக்கப்பட்டோரின் தரப்பில் இதுகுறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்பதையும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் மேலும் தெரிவித்தார்.
