வில்நுவ்- சென்- ஜோர்ஜெஸில் இறந்த தாயின் சடலத்துடன்பல வாரங்கள் வசித்த மகன்!

வீட்டில் உயிரிழந்த தனது வயோதிபத் தாயாரது சடலத்துடன் பல வாரங்கள் வசித்துவந்த நபர் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

பாரிஸ் புறநகரான வில்நுவ்- சென்- ஜோர்ஜெஸ் (Villeneuve-Saint-Georges) பகுதியில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளளதாக அறிவிக்கப்படுகிறது.

துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் கொடுத்த தகவலை அடுத்தே சிறிய மாடிக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் அமைந்திருந்த வீட்டை சோதனையிட்ட பொலீஸார் அங்கிருந்து 92 வயதான மூதாட்டியின் சடலத்தை மீட்டனர்.

அப் பெண் உயிரிழந்து பல வாரங்கள் கடந்திருக்கலாம் என்று சடலத்தை அழுகிய நிலையில் மீட்டெடுத்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டிலேயே வசித்து வந்த அவரது மகனான 57 வயது ஆண் ஒருவரைப் பொலீஸார் கைது செய்தனர். அவரது நடத்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று காணப்பட்டதால் பின்னர் அவர் சமூகநல சேவைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப் படுகிறது. சம்பவம் நடந்த வீடு நீதி விசாரணைகளுக்காக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

(படம் :பரிஷியன் செய்திச் சேவை)

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *