அதிகாலை வீதிக் கடமையின் போது பொலீஸார் இருவர் சுட்டுக்கொலை!

ஜேர்மனியின் Kusel நகரில் சம்பவம்.

ஜேர்மனியின் மேற்குப் பிராந்தியத்தில் போக்குவரத்துக் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இளம் பொலீஸ்உத்தியோகத்தர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

குசெல் (Kusel – Rhineland-Palatinate) என்றமாவட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.வீதிக் கடமையில் நின்றிருந்த29, 24 வயதான ஆண் மற்றும் பெண் பொலீஸ் அலுவலர்களே தலையில் சுடப்பட்டு உயிரிழந்தனர். அதிகாலை 4.20 மணியளவில் தாங்கள் சுடப்பட்ட தகவலை அவர்களில் ஒருவர் உயிர் துறப்பதற்கு முன்பாகத் தலைமைப் பொலீஸ் பிரிவிற்கு வானொலி மூலம் தெரிவித்திருக்கிறார். பொலீஸார் அவ்விடத்துக்கு விரைந்து சென்றபோது இருவரும் உயிரிழந்துவிட்டனர். தாக்குதலாளிகளும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கார் ஒன்றை வழிமறித்த சமயத்திலேயே இருவரும் சுடப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஜேர்மனியில் பொலீஸார் கொல்லப்படுகின்ற சம்பவங்கள் மிக அரிதாகவே நிகழ்வதுண்டு. அதனால் இருவர் உயிரிழந்த இன்றைய சம்பவம் பரவலாக கவனத்தை ஈர்த்தது. தாக்குதலாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான பரந்துபட்ட தேடுதல் நடவடிக்கைகள் அயல் பிரதேசம் எங்கும் இன்று பகல் முழுவதும் நீடித்தன.பெரும்எண்ணிக்கையான பொலீஸ் கொமாண்டோக்கள் வீதித் தடைகளைப் போட்டு வாகனங்களைச் சோதனையிட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார்38 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ளஓர் இடத்தில் 32 வயதான முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து 38 வயதான மற்றொரு ஆணும் கைதானார். அவரிடமிருந்து துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.இருவரது நோக்கமும் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.-

குமாரதாஸன். பாரிஸ்.