கத்தார் எயார்வேய்ஸுடனான ஒப்பந்தத்தை எயார்பஸ் முறிக்கவேண்டாம் என்கிறது நீதிமன்றம்.

எயார்பஸ் நிறுவனத்தால் விற்கப்பட்டிருந்த Airbus A350 விமானங்களின் நிறத்தின் தரம் மோசமானது, அது விமானத்தின் பாதுகாப்புக்கு இடையூறானது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது கத்தார் எயார்வேய்ஸ். அதனால் தாம் அந்த நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தமிட்டிருந்த  A321neo விமானங்களை வாங்க மறுக்கிறது அந்த நிறுவனம். சில மாதங்களாகவே இந்த இரண்டு பலம் வாய்ந்த நிறுவனங்களும் ஐக்கிய ராச்சியத்தின் நீதிமன்றத்தில் மோதிக்கொண்டிருக்கின்றன.

தமது விமானங்களிலிருக்கும் சில தரக்குறைவுகளை எயார்பஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், கத்தார் எயார்வேய்ஸ் தமது நிறுவனத்தின் தயாரிப்புக்கள் பாதுகாப்புக் குறைந்தவை என்று தரம் தட்ட முனைவதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

எயார்பஸ் நிறுவனம் தான் கத்தாருக்கு விற்கவிருந்த விமானங்கள் பற்றிய ஒப்பந்தத்தைக் கிழித்தெறியவேண்டும் என்கிறது. அந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எயார்பஸ் நிறுவனமோ தாம் கத்தார் எயார்வேய்ஸுக்காகத் தயாரித்த விமானங்களை வேறு விமான நிறுவனங்களுக்கு விற்க விரும்புகிறது. இரண்டு தரப்பாரையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் மீண்டும் சந்திக்கவிருக்கிறது நீதிமன்றம்.

சாள்ஸ் ஜெ. போமன்