இறப்பு என்பது எனக்கு கிடையாது..!

எழுதத் துடிக்கிறேன்
இருகப் பிடித்திருக்கும்
இரு விரல்களின் சூட்டில்
என் உதிரம் உருக்கி
உண்மையை மட்டும்
எழுத நினைக்கிறேன் ❗

அவரவர் எண்ணங்களையும்
அவலங்களையும்
அம்பலப்படுத்துவேன்
ஆனந்தத்தை அரங்கேற்றுவேன்

என் பிறப்பின் கதை
பெரும்பாலும்
அறிந்திருப்பது அரிது
இறப்பு என்பது
எனக்குக் கிடையாது

எழுத்தாணி என்று பிறந்த நான் இன்று பல வண்ணங்களில்
பல வடிவங்களில்
பேனா என்று பரிணாமம் அடைந்திருக்கிறேன்
தவிர்க்க முடியாது

தாய்மொழி
என்றொன்று தெரியாது
வாய் வழி வார்த்தையில்
ஒளிவு மறைவு கிடையாது

என் பயணத்தில்
நான் பார்த்த
இன்ப துன்பங்கள்
பலநூறு
மண்ணில்
நான் சொல்லி வச்சதே வரலாறு ❗

சண்டையிலும்
சமூகமளித்திடுவேன்
இரு தரப்பு சமாதானத்திலும்
சங்கமமாகிடுவேன்

சத்தமின்றி பேசியே
சாதனையும் புரிவேன்
யுத்தமின்றியே
உலக ஆட்சியையும் மாற்றுவேன்

உண்மைக்கு மட்டும்
உதவிட உள்ளம் துடிக்கும்
ஆனாலும்
உலகம் என்னை
உருப்பாடாமலும் பேச வைக்கிறது

ஆக்கவும்
அழிக்கவும்
ஆற்றல் பெற்றவன்
நான் பேனா… ❗

அ. அ. நவாஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *