சேலம் எனும் பசுஞ்சோலை..!

சேலம் எனும் பசுஞ்சோலை

நாற்திசையும் மலைகளாய்
நறுமணமே தென்றலாய் !

நீராடும் பூமியாய்
நிறமெல்லாம் பசுமையாய் !

படைப்புகளின் புகலிடமாய்
பிரம்மனுக்கே பொறாமையாய் !

மேதினியில் மேவுகின்ற
பெருமைமிகு நகரமிது ! – இங்கே

வானும் மண்ணும்
பொய்யாது கிடக்கும் !

ஆறுகளும் ஏரிகளும்
கூட்டணியில் மிதக்கும் !

தென்னையும் கமுகும்
பனையும் வாழையும்

விண்ணோடுப் பேசி
உறவினைக் கூட்டும் !

மலை வளர் பலாவோ
மனதினில் உலா வரும் !

மாவின் சுவையோ
நாவினைக் கவ்வி

நானிலம் எங்கும்
சேலம் சேலமெனக் கூவும் !

இரும்பும் கரும்பும்
இதிகாசம் படைக்கும் !

குளம்பியும் மிளகும்
கும்மாளம் கொட்டும் !

பருத்தியும் பட்டும்
பட்டாடையாய் மலரும் !

மலர்களின் களஞ்சியமாய்
மாநகர்த் திகழும் !

ஆலயங்கள் அணிவகுத்து
ஆன்மாவைக் காத்திடும் !

ஈரத்தின் தன்மையில்
மாந்தர்தம் மனம் போல
மண்ணும் குளிரும் !

வாழும் போதே சுவர்க்கத்தை
காட்டுகின்ற பூமியை

காண்போர் விரைத்திருடுக
காண்போரில் கலந்திடுக !

சேலம் தினத்தில்…

சேலத்து மண் எடுத்து
முத்தம் ஒன்றை தந்திடுக !

மணம் வீசும் பூமியில்
மனம் தந்து…

ஹேமா ஹைதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *