மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம்,
நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்,
ஷார்ஜா நகரில் நிலத்தடி மின் அமைப்பு மின்சாரம் கசிந்து தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஜயமினி சந்தமாலி விஜேசிங்க, என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மத்துகம C.W.W. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர்தரம் படித்த மாணவியாகும்.
அவர் தனது சகோதரர் மூலம் வரவேற்பாளராக 11 மாதங்கள் பணிபுரிந்தார்.
கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து எதிரே அமைந்துள்ள கடைக்கு செல்வதற்காக வந்துள்ளார்.
அந்த நேரத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெய்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால், மின் அமைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத சந்தமாலி வெள்ள நீரில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அந்த நேரத்தில், இரண்டு எகிப்தியர்கள், ஒரு பங்களாதேஷ் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் ஆகியோரும் இந்த இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.