ஒடுக்கு முறைகளை எதிர்த்து வந்த மூதாளர் டெஸ்மண்ட் டுட்டு|Archbishop Desmond Tutu

உள் நாட்டிலும் உலகெங்கும் அறியப்பட்ட மூதாளரான தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu) தனது 90 ஆவது வயதில் காலமாகி விட்டார்.

ஈழத் தமிழர்கள் உட்பட உலகெங்கும் அநீதி இழைக்கப்பட்ட இனங்கள் மீதுதீவிர இரக்கம் கொண்டிருந்தவர் டுட்டு.நிறவெறி ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். இனவெறியற்ற தென்ஆபிரிக்காவின் வரலாற்றை எழுதிய ஒருதலைமுறையில் மிக முக்கியமான ஒரு மனிதர் அவர்.

நிறவெறி எதிர்ப்பின் உலக சின்னமாக விளங்கிய நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவர் டஸ்மன்ட் டுட்டு. தென்ஆபிரிக்காவில் 1948 முதல் 1991 வரை கறுப்பு இனப் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சிறுபான்மை வெள்ளை இன அரசுமுன்னெடுத்த இனப் பிரிவினை, மற்றும்பாகுபாட்டுக் கொள்கைகளை முடிவுக்குக்கொண்டு வரப் போராடிய இயக்கத்தின் முக்கிய உந்து சக்திகளில் ஒருவராக விளங்கியவர் அவர் . ஆபிரிக்க நிறவெறி அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்த கிளர்ச்சிகளுக்காக அவருக்கு 1984 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவின் நிற வெறி ஆட்சிக்காலத்தின் கடைசி அதிபராக விளங்கியஎப்டபிள்யூ டி கிளார்க் (FW de Clerk) அவர்களது மரணம் நிகழ்ந்து சிறிது காலத்தில்டுட்டுவின் மறைவு நேர்ந்திருக்கிறது.

நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச மூதாளர் அமைப்பின் (The Elders) முக்கிய உறுப்பினராக விளங்கிய டெஸ்மண்ட் டுட்டு, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்டமனித உரிமை மீறல்களுக்காக அடிக்கடிகுரல் கொடுத்து வந்தவர்.இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்தி மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதை வலியுறுத்தி வந்த மூதாளர் டுட்டு தனது இறுதிக் காலம் வரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

தனது 80 ஆவது பிறந்த நாளில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர், “உங்களது பெயர் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் நினைப்பதே ஒரு மரியாதை. அதுவே பெரும் பாக்கியம்”என்று கூறியிருந்தார்.தென் ஆபிரிக்கா கறுப்பின ஆட்சியில் இருந்து விடுதலையாகி நெல்சன் மண்டேலா அதிபராகப் பதவியேற்ற சமயத்தில் ஒரே நிற ஆட்சிநடைபெற்ற தனது நாட்டைப் பல்லின-பல நிறங்களின் “வானவில் தேசம்”(Rainbow Nation) என்று விளித்து டுட்டு கூறிய வார்த்தை மிகப் பிரபலமாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்திருந்தது.

டெஸ்மண்ட் டுட்டு 1997 இல் முதல் முறையாகப் புரோஸ்டேட் புற்றுநோய்ப் (prostate cancer) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் நத்தார் தினத்துக்கு மறுநாள் உயிரிழந்திருக்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்.