ஸ்பானிய காய்ச்சலின் போது மருந்தாக மாறியதா விஸ்கி?

கொரோனா வைரஸ் மீதான அச்சம்போதிய மருத்துவ வசதிகள் உள்ள இன்றைய காலகட்டத்தில் கூட இஞ்சியையும் மஞ்சளையும் மருந்தாக நம்பும் நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளது. வீடுகளில் ஒக்சிஜன் தயாரிப்பது போன்ற மாற்று அறிவியல் முயற்சிக ளுக்கும் வித்திட்டுள்ளது.

உலகம் விஞ்ஞான, மருத்துவத் துறை களில் உச்சத்தில் இருக்கின்றபோதே நிலைமை இப்படியாகும் என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ஒரு பெரும் தொற்று நோய் பரவியிருந்த சமயத்தில் மனித குலத்தின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்?

உலகின் தொற்று நோய்களுக்கு எல்லாம் “தாய்”என்று வர்ணிக்கப்படுகின்ற ஸ்பானியக் காய்ச்சல் 1918-1920 காலப்பகுதியில் உலகெங்கும் 50-100 மில்லியன் மக்களைப் பலிகொண்டதாக மதிப்பிடப்படுகிறது. ஒக்சிஜன் வசதிகளோ தடுப்பு மருந்துகளோ எதுவும் கிடையாது.

சாதாரணமாக மூக்கில் தடவும் “விக்ஸ் வேபறப்” (Vicks Vaporub) போன்ற கை மருந்துகளைத் தவிர அன்ரிபயோரிக் (antibiotics) எனப்படுகின்ற நோய் எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணிகள் ஏதும்பயன்பாட்டில் இருந்திராத காலம் அது.

இன்றைக்குப் போலவே அன்றைக்கும் ஆவி பிடித்தல் முதல் கசாயம் குடித்தல் எனப் பல வகை கைவைத்தியங்களே கைகொடுத்தன. அக்காலத்தில் மதுகுறிப்பாக விஸ்கி (whiskey) ஒரு மருந்தாக நம்பப்பட்டது. பயன்படுத்தப்பட்டது.

அதற்கான ஆதாரங்கள் பல உள்ளன இஞ்சி, மஞ்சள் போன்றவற்றுடன் ஒப்பிடமுடியாதது என்றாலும் மது குறிப்பாக விஸ்கி அன்றைய நாள்களில் எப்படி ஒர் அருமருந்தாக நம்பப்பட்டுள்ளது என்ற தகவலை “ரைம்ஸ் ஒவ் இன்டியா” பத்திரிகை தனது மிகப்பழைய கட்டுரை ஒன்றை ஆதாரமாகக் கொண்டு வெளியிட்டிருந்தது. 1919 ஏப்ரல் 4ஆம் திகதி பதிப்பில் இடம்பெற்றுள்ள செய்திக்கட்டுரையில்,விஸ்கி நோயைத் தணித்து இறப்பு வீதங்களைக் குறைக்கும் என நம்பியவர்கள், அதன் விற்பனை மீது இருந்த தடையைத் தளர்த்துவதற்குக் குரல் கொடுத்துள்ளனர் என்பதைச் சொல்கிறது. ஆனால் அது கட்டுப்பாடின்றி விற்கப்பட்டால் மருத்துவத்தேவையை விட ஆபத்தான அளவில் நுகர்வு அதிகரித்துவிடலாம் என்ற அச்சமும் இருந்துள்ளது.

பெருந் தொற்று நோய்க் காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் விஸ்கி விற்பனை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. மொத்த விற்பனை வழமையை விட மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டியதாக 1918 ஆம் ஆண்டின் விஸ்கி விநியோகமுகவர் நிறுவனம் ஒன்றின் தகவல்தெரிவிக்கிறது. ஸ்பானிய வைரஸ் காய்ச்சல் நோயைகுணப்படுத்துவதற்கு விஸ்கி உதவும்என்பதற்கு அந்த சமயத்தில் அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.

ஆனால் நோயாளியின் தாங்கமுடியாத உபாதை நிலைமையில் விஸ்கியின் போதையும் மயக்கமும் ஒரு தற்காலிக வலி நிவாரணியாக இருக்க முடியும் என்று கருதிய மருத்துவர்கள் அதனை சிபாரிசு செய்துள்ளனர்-என்று அந்தக்கட்டுரை கூறுகின்றது. விஸ்கி கைகளைத் தொற்று நீக்குவது முதல் நோயின் அவஸ்த்தையைக் குறைப்பது வரை பல நோக்கங்களுக்காகப் பயன்பட்டுள்ளது.

வாழ்நாளில் ஒரு முறையேனும் விஸ்கி அருந்தியிராதவர்கள் கூட அதனை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. மருத்துவர்களும் தாதியர்களும் முன்னரங்குகளில் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டவர்களும் சிறிதளவான விஸ்கி பாவனையைச் சிபாரிசு செய்துள்ளனர். இதயம் மற்றும் சுவாசத் தொகுதிகளதுநலிவடைந்த செயற்பாட்டைத் தூண்டுவதற்கு விஸ்கி உதவக் கூடும் என்று சில மருத்துவர்கள் நம்பினர்.

நோயால் அவஸ்த்தைப்படுபவர்களை சிறிதளவு மயக்கநிலையில் வைப்பதற்கும் அது ஒரு மருந்தாக மாறி இருந்திருக்கிறது. அதேபோன்று புகைத்தல் வைரஸைக்கட்டுப்படுத்தலாம் எனவும் நம்பப்பட்டது. அமெரிக்காவில் தொழில் இடங்களில் புகை பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன என்ற தகவல்களும் பழைய ஆவணங்களில் பதிவாகி உள்ளன.இன்றைய கொரோனா காலத்தில் கூட வைரஸ் நோய்க்கு விஸ்கி நல்லதா கெட்டதா என்ற விவாதங்கள்எழுந்தன.

பொதுவாக மது வகைகள்உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையைபாதிக்கச் செய்கின்றன என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்ட இன்றைய காலத்திலும் மதுவைமருந்தாக எண்ணுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் மதுவுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறுவதை மருத்துவ உலகம் அடியோடு நிராகரிக் கிறது. மது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனமாக்குவதுடன் வலி நிவாரணமருந்துகளுடன்(painkillers) சேர்த்து அதனை உட்கொள்வது அல்ஸர் மற்றும் இரத்தப் போக்கு போன்றவற்றை உருவாக்கி நோயின் தன்மையைத் தீவிரமாக்கிவிடும் என்பது மருத்துவர்களது முடிவு. வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நாட்களில் மது அருந்துவதும் ஆபத்தானது என்பதை மருத்துவர்கள் நினைவூட்டுகின்றனர்.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *