இத்தாலியும் தடுப்பு மருந்து அடையாள அட்டையை நாட்டில் கட்டாயமாக்கி வருகிறது.
பச்சை அடையாள அட்டை என்றழைக்கப்படும் ஒரு நபர் கொவிட் 19 தடுப்பூசி போட்டதற்கான உறுதிப்பத்திரத்தை இத்தாலியும் கட்டாயமானதாக்கி வருகிறது. சமூகத்தின் பல சேவைகள், துறைகளிலும் அச்சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கே பங்குபற்ற, நுழைய அனுமதி கொடுக்கப்படும் என்றாகிவிட்டது.
பிரான்ஸ் போலன்று இத்தாலியின் பச்சைச் சான்றிதழ் படிப்படியாகக் கட்டாயப்படுத்தப்படுகிறது. தற்போது உணவுச்சாலைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் விளையாட்டரங்குகளுக்குள் நுழைவதற்கு அவசியமாக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்திலிருந்து விமானங்கள், பாடசாலை ஆசிரியர்கள், மருத்துவசாலைகளில் அவை கட்டாயமானதாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு அங்கமான இத்தாலியில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 50 விகிதமானவர்கள் ஏற்கனவே தடுப்பு மருந்துகளிரண்டையும் எடுத்திருக்கிறார்கள். வயது வந்தவர்களில் 60 விகிதமானோர் அதைச் செய்திருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்களிடையே பச்சைச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளிலும் அனேகமானோர் அதை ஆதரிக்கிறார்கள். எல்லோரும் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டு ஒரு சகஜமான வாழ்க்கை வாழ்வதற்கான ஆர்வம் அந்த நாட்டு மக்களிடையே இருக்கிறது. நாட்டின் வலதுசாரிக் கட்சித் தலைவர் மத்தியோ சல்வீனி மட்டுமே அப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்ப்பவராக இருந்து வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்