மக்ரோனின் குறுஞ்செய்தியைப் பிரசுரித்த ஆஸ்திரேலிய பத்திரிகை !

எலிஸே மாளிகை கடும் சீற்றம் இரு தரப்பு முறுகல் வலுக்கிறது.

பிரான்ஸுடனான நீர்மூழ்கி உடன்படிக்கையை ஆஸ்திரேலியா முறித்துக் கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகஅதிபர் மக்ரோன் பிரதமர் மொறிசனுக்குஅனுப்பிய குறுஞ்செய்தியை அந்நாட்டுப்பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கிறது.

“நமக்கிடையிலான நீர்மூழ்கி விடயத்தில் நல்ல செய்தியா? அல்லது பாதகமான செய்தியா நான் எதிர்பார்க்க முடியும்? (Should I expect good or bad news for our joint submarines ambitions?”)

இவ்வாறு கேட்டு ஸ்கொட் மொறிசனுக்குமக்ரோன் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றையே ஆஸ்திரேலியாவின் ” டெய்லி ரெலிகிராப்” (“Daily Telegraph”) பத்திரிகை பிரசுரித்துள்ளது. மொறிசனுக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட அந்தக் குறுஞ்செய்தியை அவரே ஊடகத்துக்குக் கசிய விட்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது. மக்ரோனின் செய்திக்கு மொறிசன் பதில் அனுப்பினாரா? பதிலில் அவர் என்ன கூறினார்? போன்ற விவரங்களை அந்தப் பத்திரிகை வெளியிடவில்லை.

நீர் மூழ்கி விவகாரத்தில் பிரதமர் ஸ்கொட் மொறிசன் “பொய்” கூறினார் என்பதைபிரான்ஸின் அதிபர் மக்ரோன் ரோம் நகரில் வைத்து ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தார். ஜீ-20 தலைவர்களின் மாநாட்டின் போதுஸ்கொட் மொறிசனை சந்தித்துப் பேசியபின்னரே மக்ரோன் செய்தியாளர்களிடம்பேசினார்.

“நான் உங்கள் நாட்டின் மீதும் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும் நட்புறவும்வைத்துள்ளேன். மரியாதை என்பது எப்போதும் இரு தரப்புகளுக்குரியது. இருதரப்புகளும் அந்த மதிப்புக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். என்னிடம் பரந்ததோள்கள் உள்ளன. சமாளித்துக் கொள்வேன்” – என்று அச்சமயம் மக்ரோன் ஆஸ்திரேலியச் செய்தியாளர் ஒருவரிடம் கூறியிருந்தார்.மொறிசன்” என்னிடம் பொய் கூறினார் என்பது எனக்குத் தெரியும்” என்றும் அவர் பதிலளித்திருந்தார்.

அவரது இந்தக் கூற்றுக்குப் பதிலடியாகவே ஆஸ்திரேலியப் பிரதமர் மொறிசன் மக்ரோனின் குறுஞ்செய்திகளைப் பத்திரிகைக்குக் கசிய விட்டிருக்கிறார் என்று கருதப்படுகிறது.

நீர்மூழ்கி உடன்பாட்டை ஆஸ்திரேலியாதொடர்ந்து முன்னெடுக்குமா என்ற சந்தேகம் பிரான்ஸின் அரசுத் தலைமையிடம் ஏற்கனவே இருந்தது என்பதைப் பகிரங்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டேஅந்த எஸ்எம்எஸ் செய்தியை ஆஸ்திரேலியா வேண்டும் என்றே கசிய விட்டிருக்கிறது. இந்த விவகாரம் ஏற்கனவே முறிந்துபோயிருக்கும் இரு நாட்டு உறவுகள் சீரடைவதற்கான வாய்ப்புகளைப் பறித்து நிலைமையை மேலும் கொதி நிலைக்கு இட்டுச் செல்வதாக அவதானிகள் கூறுகின்றனர்.

மக்ரோனின் எஸ்எம்எஸ் கசிந்தமை தொடர்பில் பிரான்ஸ் சீற்றமடைந்துள்ளது. ஆஸ்திரேலியா மீதான நம்பகத்தன்மை முற்றிலுமாகச் சிதைந்து விட்டது” என்று எலிஸே மாளிகை அதிகாரி ஒருவர் பாரிஸ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

“தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே பரிமாறப்படுகின்ற இத்தகைய தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது முறைகேடான – நேர்மையற்ற – செயல்” என்றும் அவர் அதிருப்தியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகள் பாரிஸுடன் முன்னெடுத்து வந்த அணு நீர்மூழ்கி இராணுவ உடன்படிக்கையை ஆஸ்திரேலிய அரசு அண்மையில் திடீரென முறித்துவிட்டு அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்துடன்இணைந்து புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. ஆஸ்திரேலியா முறைப்படி தனக்குத் தகவல் தெரிவிக்காமல் – ரகசியமாக – ஏமாற்றும் விதமாக ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது என்று பிரான்ஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் அந்த நடவடிக்கை”முதுகில் குத்திய செயல்” என்று பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார். கன்பெராவுக்கான தனது தூதரையும் பிரான்ஸ் திருப்பி அழைத்திருந்தது.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்