பிரிட்டனில் தமிழ்மரபுத்திங்கள் அங்கீகாரத்துக்காக நகராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து செயற்பட முடிவு…

தமிழ்மரபு திங்களுக்கான பிரிட்டன் அரச அங்கீகாரத்தை பெறும் நோக்கத்துடன் தமிழ் மரபுத் திங்கள் செயல்பாட்டுக் குழுவினருக்கும் இலண்டன் மற்றும் இலண்டன் பெரும்பாக நகராட்சி மன்றங்களைச் சேர்ந்த தமிழ் நகராட்சிமன்ற உறுப்பினர்களுக்குமிடையே கலந்துரையாடல் நிகழ்வொன்று கடந்த வெள்ளிக்கிழமை டிசெம்பர் மாதம் 17ம் திகதியன்று இடம்பெற்றது.

மெய்நிகர் வழியாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், தமிழ் மரபுத் திங்கள் செயற்பாட்டுக் குழுவினர் பிரித்தானியாவில் தமிழரின் மரபுத் திங்கள் நிகழ்வு கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் தமிழ் மரபுத்திங்களுக்கான பிரித்தானிய அரச அங்கீகாரத்தை பெறும் நோக்குடன் கடந்த 3 வருடங்களாக தாம் முன்னெடுத்துவருகின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் பணிகள் பற்றி ஆரம்பத்தில் விளக்கமளித்தனர்.

அதனைத்தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் அதிகூடியளவு மக்களாக தமிழ் மக்கள் வசிப்பதை அடிப்படையாகக்கொண்டு அந்தந்த நகராட்சி மன்றங்களினூடாக தமிழ் மரபுத்திங்கள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அவை குறித்த செயற்பாடுகள் பிரிட்டன் அரச அங்கீகாரத்துக்கான ஒர் உந்துசக்தியாகவும் இருக்குமெனவும் கருத்துகள் நிலவுகின்றன.

இக்காத்திரமான கலந்துடையாடலில் இணைந்த செயல்திட்டங்களுக்கான இணைக்கப்பாட்டினை பல நகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தங்கள் ஆமோதிப்பினை தெரிவித்துள்ளனர்.

அதன் படி தமிழ் மரபுத்திங்கள் செயல்திட்டத்தின் குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்ல தமது ஒத்துழைப்பினை வழங்குதுடன், தமிழ் மரபுத்திங்கள் செயல்திட்டத்துக்கான அரச ஆணையை பெறும் வகையில் நகராட்சி மன்றங்களில் தீர்மானம் கொண்டுவரும் செயல்திட்டத்தில் தமிழ்மரபு செயற்பாட்டுக் குழுவினருடன் தாம் சார்ந்த கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு இதை நிறைவேற்றுவோம் என கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே தமிழ்மக்கள் செறிந்து வாழும் சில நகராட்சி மன்றங்கள் தத்தமது நகராட்சி மன்றங்களினூடாக தைத்திங்களின் தைப்பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாக நகராட்சி மன்றங்களில் கொண்டாடி வருகின்றமையானது இந்த முயற்சிக்கு மேலும் வலுவூட்டும் அம்சங்களாகும்.