கோவிட் 19 தாக்கத்தால் இனி தனிமைப்படுத்தல் 7 நாள்கள்|இங்கிலாந்தில் புதிய அறிவிப்பு

இங்கிலாந்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 நாள்களின் பின்னர் இரண்டு முறை சோதனை செய்து கோவிட் வைரஸ் தாக்கம் அற்றவராகினால், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சுய தனிமைப்படுத்தலை நிறுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தாக்கம் ஏற்பட்டு ஆறாவது நாள் மற்றும் ஏழாவது நாளில் பரிசோதனையின் போது, கோவிட் தாக்கம் அந்தவேளை இல்லை நிரூபிப்பதன் மூலம் , 10 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்குப் பிறகு அவர்களால் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு பூராகவும் மிகப்பெரும் சவாலாக உள்ள ஒமிக்கரோனின் விரைவான பரவலால் ஏற்படும் இடையூறுகளை இது குறைக்கும் என்று நம்புவதாக சுகாதார செயலாளர் சாஜிட் ஜாவிட் தெரிவிக்கின்றார்.

இந்த மாற்றம் செய்யப்பட்ட முடிவு சுகாதார நிபுணர்களின் அண்மைய வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வணிகங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரயில் சேவைகளுக்கு பணியாளர்கள் பற்றாக்குறையை உருவாக்கிய திரிபடைந்த புதிய கோவிட்டின் சவால்களுக்கு மத்தியில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.