இளவயதினரிடையே ஒமெக்ரோன் தீவிரமாகப் பரவுவதாக எச்சரிக்கை.

நெருங்கிய தொடர்பைத் தவிர்த்து இடைவெளி பேண வேண்டுகோள்!

நாட்டில் இளவயதினர் அதிகளவில் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர் என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இன்று எச்சரிக்கை செய்துள்ளார். குறிப்பாக 20-40 வயதுக்கு இடைப்பட்டோர் மத்தியில் ஒமெக்ரோன் தொற்று மிக அதிகமாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அரசு இத் தகவலை மிகத் தெளிவாக மக்களுக்குக் கூறிக்கொள்கிறது. கூடியவரை நெருங்கிய தொடர்புகளைத் தவிர்த்து நடக்குமாறு இளவயதினரை அறிவுறுத்துகிறோம் – என்று அவர் பிரதமர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில்73 ஆயிரம் புதிய தொற்றுக்கள் பதிவாகியிருக்கின்றன. தொற்றுக்களில் 20 வீதமானவை ஒமெக்ரோன் திரிபுத்தொற்றுக்கள் ஆகும். இளவயதினரிடையே ஒமெக்ரோன் தொற்று அதிகரிப்பது அவர்கள் மூலமாக அது வயோதிபர்களுக்கும் பலவீனமான ஏனையோருக்கும் பரவுவதற்கு வழி வகுத்துவிடும் என்று கப்ரியேல் அட்டால் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பிரான்ஸில் ஐந்து மில் லியன் பேர் இதுவரை எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர் என்ற தகவலை சுகாதாரப்பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார். விரைந்து தடுப்பூசிகளைப்பெற்றுக் கொள்ளுமாறு சகல மக்களையும் அவர் கேட்டிருக்கிறார்.

நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டகாலப்பகுதி பெரும் தொற்றுக் காலமாகஇருக்கும் என நம்பப்படுகிறது. நத்தாருக்குப் பின்னர் பல புதிய கட்டுப்பாடுகளைஅறிவிப்பதற்கு நாடுகள் தயாராகி வருகின்றன.

🔴இஸ்ரேலில் நான்காவது ஊசி!

ஒமெக்ரோன் தொற்றில் இருந்து பாதுகாப்பளிப்பதற்காக 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நான்காவது தடுப்பூசி ஏற்றுகின்ற திட்டத்தை இஸ்ரேலியஅரசு அறிவித்திருக்கிறது. நாட்டில் ஒமெக்ரோன் திரிபு தொற்றிய ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே அங்கு நான்காவது தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உலகில் தனது மக்களுக்கு நான்காவது வைரஸ் தடுப்பூசியை அறிமுகம் செய்கின்ற முதல் நாடு இஸ்ரேல்ஆகும்.

ஜேர்மனி டிசெம்பர் 28 முதல் ஒன்று கூடுவதற்கான எண்ணிக்கையை வரையறைசெய்துள்ளது. தடுப்பூசி ஏற்றியவர்களாகஇருப்பினும் தனிப்பட்ட ஒன்று கூடல்களில் பத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் வருட இறுதிக் கொண்டாட்டங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.”வாழ்க்கையை இழப்பதை விடவும் ஒரு கொண்டாட்டத்தை இழப்பது எவ்வளவோ மேலானது..” – என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்.